உள்கட்டமைப்புத் துறையில் மாபெரும் வளர்ச்சிக்குத் தயாராகிறது இந்தியா: பிரதமர் மோடி
உள்கட்டமைப்புத் துறையில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை எட்டுவதற்குக் தயாராகி வருகிறது என்றும் நெடுஞ்சாலை,
உள்கட்டமைப்புத் துறையில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை எட்டுவதற்குக் தயாராகி வருகிறது என்றும் நெடுஞ்சாலை, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சியை ஊக்குவிக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
"சேது பாரதம்' திட்டம்: எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்குள் ரயில்வே கடவுப்பாதைகள் குறுக்கிடாத நெடுஞ்சாலைகள் இருப்பதை உறுதிப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதற்காக ரயில்வே கடவுப்பாதைகள் குறுக்கிடும் இடங்களில் ரூ.20,800 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் அமைக்கவும், ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட 1,500 பாலங்களை ரூ.30,000 கோடி மதிப்பில் புதுப்பிக்கவும் "சேது பாரதம்' என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.
ஒட்டுமொத்தமாக ரூ.50,800 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள இந்தத் திட்டத்தை தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் மோடி பேசியதாவது:
பல்வேறு திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக, உள்கட்டமைப்புத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை எட்டுவதே நமது நோக்கமாகும். மனித உடலுக்கு ரத்த நாளங்களைப் போல் நாட்டுக்கு சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
உள்கட்டமைப்புத் துறையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை. நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. அதைக் கருத்தில்கொண்டே ஒருங்கிணைந்த அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமின்றி, தகவல் தொடர்பு வசதிகள், ரயில்வே ஆகிய துறைகளுக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
வழக்கமாக அரசுகள் மேற்கொள்ளும் பணிகளைப் போலன்றி, தற்போதைய மத்திய அரசு மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது. நீண்ட கால வளர்ச்சியே அதன் நோக்கமாகும். மக்களின் நீண்ட கால விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக அது பாடுபட்டு வருகிறது.
முதல் முறையாக, நாட்டில் உள்ள அனைத்துப் பாலங்களும் வரைபடமாக உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள ஒன்றரை லட்சம் பாலங்களையும் வரைபடத்தில் கொண்டுவருவதற்காக இந்திய பால மேலாண்மை அமைப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது நாள் வரை எந்தப் பாலம் எங்கு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட சூழலில் பணிகள் எவ்வாறு நடைபெறும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். பாலங்கள் தொடர்பாக இதுவரை வரைபடம் உருவாக்கப்படாதது பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசு அல்லது அமைப்பையோ, முன்னாள் பிரதமர்கள் யாரையோ நான் குறைகூறவில்லை.
இது நமது நிர்வாக அமைப்பின் குறையாகும். இதுபோன்ற விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிப்பதில்லை.
மேலும், முதல் முறையாக விண்வெளித் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பாலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை கட்டப்பட்ட ஆண்டு, அட்ச ரேகை, தீர்க்க ரேகை, நீளம், வடிவமைப்பு உள்ளிட்ட தகவல்களைக் கொண்டு இந்தத் தரிவரிசை அமையும் என்றார் மோடி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.