தேர்தலில் தனித்துப் போட்டி: மம்தா அறிவிப்பு
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும்,
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள 294 வேட்பாளர்களின் பட்டியலையும் அவர் வெளியிட்டார். மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கி மே 5-ஆம் தேதி வரை 6 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
பேரவைத் தேர்தலையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களை மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
எதிர்வரும் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து அப்போது அவர் விளக்கமளித்தார். இதுதொடர்பாக மம்தா கூறியதாவது:
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளது. கடந்த பேரவைத் தேர்தலில் போட்டியிட கட்சியில் 31 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. தற்போது 45 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை சமூகத்தைச் சேந்த 57 பேருக்கு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாநில முன்னாள் அமைச்சர் மதன் மித்ரா (சாரதா நிதி மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்) இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். மேற்கு வங்கத்தில் அமைதியான சூழல் நிலவி வருகிறது. மதம் மற்றும் சமூக ரீதியான பதற்ற நிலை எதுவும் மாநிலத்தில் இல்லை.
எதிர்க்கட்சிக் கூட்டணி மீது விமர்சனம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேற்கு வங்கத்தில் கைகோத்துள்ளன.
கேரளத்திலும் அவர்கள் ஏன் அவ்வாறு கூட்டணி அமைத்து ஆட்சி புரியக் கூடாது? அவ்வாறு செய்தால் தேர்தல் ஆணையத்துக்கு பண விரயம் இருக்காது.
அந்த இரு கட்சிகளும் இணைந்து பொருத்தமற்ற ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன. மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்றார் மம்தா பானர்ஜி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.