தொலைக்காட்சி சேனல் மீது உரிமை மீறல்: உ.பி. பேரவையின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை
செய்தி தொலைக்காட்சி சேனல், அதன் செய்தியாளர்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச பேரவை மேற்கொண்ட உரிமை மீறல் நடவடிக்கைக்கு
செய்தி தொலைக்காட்சி சேனல், அதன் செய்தியாளர்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச பேரவை மேற்கொண்ட உரிமை மீறல் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.
உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகரில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, வன்முறைக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மாநில அமைச்சர் ஆசம் கான் கூறியதாக இரு செய்தி தொலைக்காட்சி சேனல்கள் தகவல்களை வெளியிட்டன. தாங்கள் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையில் இந்த விவரம் தெரியவந்ததாகவும் அந்த சேனல்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து முசாஃபர்நகரில் பெரிய அளவில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த இரு தொலைக்காட்சி சேனல்கள் மீது உத்தரப் பிரதேச பேரவைக் குழு விசாரணை மேற்கொண்டதுடன், அந்த சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில், அந்த தொலைக்காட்சி சேனல்கள், அதன் செய்தியாளர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து தொலைக்காட்சி செய்தியாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், பேரவைக்கு வெளியே நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரிக்க பேரவை உரிமை மீறல் குழு அமைக்கப்பட்டது எப்படி? என்று கேள்வி எழுப்பியதுடன், தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு எதிரான உத்தரப் பிரதேச சட்டப் பேரவையின் நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தது.
செய்தியாளர்களின் மனு தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்றும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உத்தரப் பிரதேச பேரவைத் தலைவர் மாதா பிரசாத் பாண்டே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.