கூடங்குளம் அணுமின் திட்டத்தில் விதிமீறல்: சி.ஏ.ஜி பரபரப்பு குற்றச்சாட்டு!
கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தில் நடைபெற்ற விதிமீறல்கள் காரணமாக அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமைக் கணக்காயர் (சி.ஏ.ஜி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த..
புதுதில்லி: கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தில் நடைபெற்ற விதிமீறல்கள் காரணமாக அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமைக் கணக்காயர் (சி.ஏ.ஜி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய அரசின் உதவியுடன் அணுமின் உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக அலகு ஒன்று செயல்படத் துவங்கியது. பின்னர் சிறிது காலத்தில் இரண்டாவது அலகும் செயல்படத் துவங்கியது. தற்பொழுது மேலும் இரண்டு அணு உலைகளை அமைக்க திட்டமிட்டு பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்ட செயல்பாடுகள் குறித்த மத்திய தலைமைக் கணக்காயர் (சி.ஏ.ஜி) அறிக்கையானது புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தில் நடைபெற்ற விதிமீறல்கள் காரணமாக அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பிற விபரங்கள் வருமாறு:
Advertisement
Advertisement
கூடங்குளத்தில் ரஷ்ய அரசின் உதவியுடன் அணுமின் உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு முதல் இரண்டு அலகுகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை அமைக்க திட்டமிட்டதை விட மிகுந்த தாமதம் ஏற்பட்டது. முதல் அலகுக்கு ஏழு வருடங்களும், இரண்டாவது அலகுக்கு ஆறு வருடங்களும் தாமதம் உண்டானது. இதன் காரணமாக அதிகரித்த திட்டச் செலவுக்கு என ரூ.449.92 கோடி ரூபாய் வட்டிக்கு மட்டுமே கூடுதலாக செலவானது. அத்துடன் அரசு நிறுவனங்களிடம் இல்லாமல் வெளியில் இருந்து கடன் பெற்றதால் அதன் காரணமாக கூடுதலாக வட்டிக்கு ரூ.75 கோடி செலவானது. இப்படியாக வட்டி என்ற வகையில் மட்டும் ரூ.525 கோடி அதிகமாக செலவானது.
அதேபோல ஹெச்.டி எப்.சி வங்கியில் இருந்து ரூ.1000 கோடி கடனாகப் பெறப்பட்டதில் அரசுத் திட்டச் செலவீனங்களுக்கான மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
அத்துடன் அணுஉலைக்கு என தரம் குறைந்த மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதன் காரணமாகவும் கூடுதல் செலவு உண்டாகியுள்ளது.
இவை அனைத்தையும் தடுத்திருக்க வேண்டும். ஆனால் அது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு மத்திய தலைமைக் கணக்காயர் (சி.ஏ.ஜி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.