முகப்பு
இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ அழைப்பாணை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், வரும் 21-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகுமாறு சிபிஐ புதன்கிழமை சம்மன் அனுப்பியது.

Updated On : 20 ஜூலை 2017, 2:08 am IST
பகிர்:

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், வரும் 21-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகுமாறு சிபிஐ புதன்கிழமை சம்மன் அனுப்பியது.
இதுதொடர்பாக, சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: தொழிலதிபர் பீட்டர் முகர்ஜியும், இந்திராணி முகர்ஜியும் ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மோரீஷஸ் போன்ற வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைப் பெறுவதற்காக, அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் (எஃப்ஐபிபி) இருந்து சட்ட விரோதமாக ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் அனுமதி பெற்றுத் தந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அதற்காக, அந்த நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரம் லஞ்சம் வாங்கியதாகவும், அந்த நிறுவனத்தை மறைமுகமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து, கடந்த இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கடந்த மே மாதம், அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக, அவருக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், நேரில் ஆஜராவதற்கு அவர் அவகாசம் கோரியிருந்தார். இந்நிலையில், வரும் 21-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.