ஆப்கனில் இந்தியர் உள்ளிட்ட 3 வெளிநாட்டினர் கடத்தி படுகொலை
ஆப்கானிஸ்தானில் இந்தியர் உள்பட 3 வெளிநாட்டினர் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் இந்தியர் உள்பட 3 வெளிநாட்டினர் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே வியாழக்கிழமை காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்தியர், மற்றொருவர் மலேசியாவைச் சேர்ந்தவர்; மற்றொருவர் மாசிடோனியாவைச் சேர்ந்தவர் ஆவர்.
இவர்கள் மூவரும் காபூலில் உள்ள பிரெஞ்சு உணவகத்தில் சமையலராகப் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் வியாழக்கிழமை காலை காரில் உணவகத்துக்கு வந்து கொண்டிருந்தனர். தொழில்பூங்கா அருகே வந்தபோது, அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்திய 4 மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் மூவரையும் கடத்திச் சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த வாகன ஓட்டுனர், பிரெஞ்சு உணவகத்தின் அலுவலகத்துக்குச் சென்று மூவரும் கடத்தப்பட்ட விவரத்தை தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடத்தப்பட்டவர்களைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
2 மணி நேரத் தேடலுக்குப் பிறகு, அங்குள்ள முஸாஹி பகுதியில் இருந்து மூவரும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இதுபோன்ற கடத்தல்-படுகொலை சம்பவங்களுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு அடிக்கடி பொறுப்பேற்கும். ஆனால், இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இது, பயங்கரவாதிகளின் நாசவேலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அண்மைக் காலமாக, வெளிநாட்டினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியிடப்படவில்லை. உயிரிழந்தவர்களின் வாகன ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா கண்டனம்: இதனிடையே, ஆப்கானிஸ்தானில் இந்தியர் உள்ளிட்ட மூவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆப்கன் அரசு அதிகாரிகளிடம் காபூலில் உள்ள இந்திய தூதரகம் விவரம் கேட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.