FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்டமசோதா மக்களவையில் வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 4:23 am IST
மக்களவையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் மசோதா மீதான விவாதத்தின்போது பேசும் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்.
பகிர்:


தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்டமசோதா மக்களவையில் வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரசமைப்பு (123-ஆவது திருத்தம்) மசோதா 2017' மீதான வாக்கெடுப்பின்போது மக்களவையில் இருந்த 406 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். அந்த மசோதா மீதான விவாதத்தில் 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். 
தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கான தேசிய ஆணையங்களுக்கு நிகராக, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும் அரசமைப்பு அந்தஸ்து அளிக்கும் வகையிலான இந்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது.
அங்கு எதிர்க்கட்சிகள் வழங்கிய சில திருத்தங்கள் சேர்க்கப்பட்டு அந்த ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட மசோதா, திருத்தங்கள் மீதான ஒப்புதலுக்காக மீண்டும் மக்களவைக்கு அனுப்பப்பட்டது. அந்தத் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு தற்போது மீண்டும் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, மசோதா மீதான விவாதத்தின்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கையை அறிய கணக்கெடுப்பு நடத்த சில உறுப்பினர்களும், 2014-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதார கணக்கெடுப்பை பொதுவில் வெளியிட வேறு சில உறுப்பினர்களும் கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே, மசோதாவின் மீது பிஜு ஜனதா தள உறுப்பினர் பரத்ருஹரி மஹதாப் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. திருத்தங்களுக்கு ஆதரவாக 84, எதிராக 302 வாக்குகள் பதிவாகின.
மசோதா மீதான விவாதத்துக்குப் பிறகு, அமைச்சர் தாவர்சந்த் கெலாட் அதற்குப் பதிலளித்துப் பேசியதாவது:
சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டுக்காக பணியாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. அவர்களுக்கான உரிமையை மேலும் உறுதி செய்யும் வகையில் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை மேலும் பலப்படுத்த அதில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில், உள் பிரிவுகளை ஆய்வு செய்யும் வகையில், நீதிபதி ரோஹிணி தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று தாவர்சந்த் கெலாட் கூறினார்.
முன்னதாக, அவையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதற்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments