FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நரோடா கலவர வழக்கு: அமித் ஷாவின் வாக்குமூலம் ஏற்புடையதாக இல்லை: எஸ்ஐடி

நரோடா கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோத்னானிக்கு ஆதரவாக பாஜக தலைவர் அமித் ஷா அளித்த

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 12:48 am IST
பகிர்:


நரோடா கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோத்னானிக்கு ஆதரவாக பாஜக தலைவர் அமித் ஷா அளித்த வாக்குமூலம் நம்பும்படியாக இல்லை என்று சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி), சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
கடந்த 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த 9 பெரிய வகுப்புவாதக் கலவரங்களில் நரோதா கலவரமும் ஒன்றாகும். குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள நரோடா பகுதியில் 2002 பிப்ரவரி 28-ஆம் தேதி நிகழ்ந்த கலவரத்தில் 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடத்தப்பட்ட முழு அடைப்பின்போது இந்தக் கலவரம் ஏற்பட்டது.
இக்கலவரம் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் 2008-ஆம் ஆண்டு சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் விசாரணையில், கலவரத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக குஜராத் முன்னாள் அமைச்சரான மாயா கோத்னானியும் சேர்க்கப்பட்டார். அந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கலவரம் நிகழ்ந்த தேதியில் முதலில் தாம் சட்டப்பேரவையில் இருந்ததாகவும், பிறகு சோலா சிவில் மருத்துவமனையில் இருந்ததாகவும் மாயா தெரிவித்தார்.
இதனை நிரூபிக்க பாஜக தேசியத் தலைவராக இருக்கும் அமித் ஷாவுக்கு அழைப்பாணை அனுப்புமாறு கோரினார். அதன்பேரில் நீதிமன்ற அழைப்பை அடுத்து, அமித் ஷா கடந்த ஆண்டு செப்டம்பரில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில், கலவரம் நிகழ்ந்த பிப்ரவரி 28-ஆம் தேதி மாயா கோத்னானியை தாம் முதலில் சட்டப்பேரவையிலும், பிறகு சோலா சிவில் மருத்துவமனையிலும் சந்தித்துப் பேசியதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமித் ஷா அளித்த வாக்குமூலம் மீதான விசாரணை நீதிபதி எம்.கே. தவே முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது வாதாடிய அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞர் கெளரங் வியாஸ், நீண்ட நாள்களுக்குப் பிறகு அமித் ஷா அளித்துள்ள வாக்குமூலம் வழக்குடன் தொடர்புடையதாக இல்லை. அத்துடன் அவரது வாக்குமூலம் நம்பும்படியாக இல்லை. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இதர நபர்கள், மாயா கோத்னானி சோலா சிவில் மருத்துவமனையில் இருந்ததாகக் குறிப்பிடவில்லை' என்று கூறினார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி எம்.கே. தவே, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments