மோடி நிகழ்ச்சியில் கூடாரம் சரிந்த விவகாரம்: மேற்கு வங்க அரசு மீது குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூடாரம் சரிந்து விழுந்த சம்பவத்துக்கு, மாநில அரசு உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாததுதான் காரணம் என்று அங்கு
மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூடாரம் சரிந்து விழுந்த சம்பவத்துக்கு, மாநில அரசு உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாததுதான் காரணம் என்று அங்கு சென்ற மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு குற்றம்சாட்டியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், மிதுனபுரியில் கடந்த மாதம் 16-ஆம் தேதி பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்றுப் பேசினார். அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை காண்பதற்காக கூடாரத்தின் கம்பங்களில் தொண்டர்கள் பலர் ஏறினர். இதனால், பாரம் தாங்காமல் கூடாரம் சரிந்து விழுந்தது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது பேச்சை சிறிது நேரத்துக்கு நிறுத்தினார். கூடாரத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும்படி தனக்கு பாதுகாப்பளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டார். மேலும், கூடாரத்தின் கம்பங்களில் யாரும் ஏற வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னர், கூடாரத்துக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு, பிரதமரின் வாகன அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 50 பெண்கள் உள்பட 90 பேர் காயமடைந்தனர். மருத்துமனையில் சேர்க்கப்பட்ட அவர்களை பிரதமர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இந்நிலையில், கூடாரம் விழுந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு சார்பில் உயர் நிலை உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. மத்திய அமைச்சரவைச் செயலர் எஸ்.கே. சின்ஹா தலைமையிலான அக்குழுவில் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் அக்குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு மாநில அரசு உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாததுதான் இந்த நிகழ்வுக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
பிரதமரின் நிகழ்ச்சியின் மாநில காவல் துறை டிஐஜி, துணை டிஐஜி ஆகியோர் அந்த இடத்தில் இல்லை. மேலும் கூடாரம் சரிந்து விழுந்த பிறகுதான் மிதுனபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். மாவட்ட ஆட்சியரும் பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்ற நோக்கதில்தான் செயல்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.