அடுத்த நிதியாண்டில் 7.5% பொருளாதார வளர்ச்சி: பன்னாட்டு நிதியம் கணிப்பு
அடுத்த நிதியாண்டில் (2019-20) நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்து வருவதன் காரணமாகவும்,
அடுத்த நிதியாண்டில் (2019-20) நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்து வருவதன் காரணமாகவும், சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாகவும் அது சாத்தியமாகும் என்றும் கூறியுள்ளது.
சர்வதேச நாடுகளின் நிதிச் சூழல் மற்றும் பொருளாதார நிலை தொடர்பான அறிக்கையை பன்னாட்டு நிதியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் இந்தியா குறித்து குறிப்பிடப்பட்டிருப்பதாவது: கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியாவில் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. அதற்கு அடுத்த ஆண்டு, சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த இருவேறு சீர்திருத்த நடவடிக்கைகளால் சில எதிர்விளைவுகள் ஏற்பட்டன. அவை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் காணமாகவே கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக குறைந்தது.
அதேபோன்று அண்மைக் காலமாக இந்தியா எதிர்கொண்டு வரும் வங்கி மோசடிகள், பெரு நிறுவன கடன் ஏய்ப்பு விவகாரங்கள் ஆகியவையும் நிதிச் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இருப்பினும், வாராக்கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதிலும், வங்கியின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அதன் வாயிலாக தனியார் முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலை தொடர்ந்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நிகழ் நிதியாண்டில் (2018-19) 7.3 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.5 சதவீதமாகவும் அதிகரிக்கும்.
அதேவேளையில், இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை பணவீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுத்து வருகிறது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது நிகழ் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் 5.2 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது என்று பன்னாட்டு நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.