FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

லோக்பால் தேர்வுக் குழுக் கூட்டம்: மல்லிகார்ஜுன கார்கே புறக்கணிக்க முடிவு

லோக்பால் அமைப்புக்கான பரிசீலனைக் குழுவை கட்டமைப்பது குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும்

Updated On : 21 ஆகஸ்ட் 2018, 1:16 am IST
பகிர்:


லோக்பால் அமைப்புக்கான பரிசீலனைக் குழுவை கட்டமைப்பது குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேர்வுக் குழுக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக மக்களவையின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு விளக்கமளித்து கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.
நிகழாண்டில் மட்டும் தேர்வுக் குழு கூட்டத்தை கார்கே புறக்கணிப்பது இது நான்காவது முறையாகும். 
அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பொது வாழ்வில் உள்ளவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு லோக்பால் என்ற அதிகாரம் பொருந்திய அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கான மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, லோக்பால் பரிசீலனைக் குழுவை முதலில் அமைக்க வேண்டும். அதில் உள்ளவர்களே லோக்பால் அமைப்பின் தலைவர் யார்? உறுப்பினர்கள் யார்? என்பதை பரிந்துரைப்பார்கள். ஆனால், அதற்கு முன்னதாக பரிசீலனைக் குழுவில் எவர் எவர் இடம்பெற வேண்டும் என்பதை பிரதமரை உள்ளடக்கிய லோக்பால் தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும்.
தேர்வுக் குழுவில், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மக்களவைத் தலைவருடன் சேர்த்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போதைய மக்களவையில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. 
கடந்த 2014 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்குத் தேவையான இடங்களில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாததே அதற்குக் காரணம். 
இதனால், லோக்பால் தேர்வுக் குழுவில் அந்த இடத்துக்கு எவரையும் நியமிக்க முடியாத சூழல் இருந்தது.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் இல்லாவிட்டால், ஆளுங்கட்சிக்கு அடுத்து அதிக உறுப்பினர்களைக் கொண்ட முக்கிய கட்சியின் தலைவரை அந்த இடத்துக்கு தற்காலிகமாக நியமிக்கலாம் என சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மல்லிகார்ஜுன கார்கே தேர்வுக் குழு உறுப்பினரானார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழுக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அதில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, அதுதொடர்பாக பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
மக்களவையில் பிரதான எதிர்க்கட்சி இல்லாதபோது முக்கிய எதிர்க்கட்சியின் தலைவரை லோக்பால் தேர்வுக் குழுவில் நியமிக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு முழு அதிகாரம் கொண்ட உறுப்பினர் அந்தஸ்து இல்லை. மாறாக, தற்காலிக நியமனமாகவே அது உள்ளது. 
மக்களவை முக்கிய கட்சியின் தலைவரை முழுநேர உறுப்பினராக நியமிக்கும் வரை தேர்வுக் குழுக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளமாட்டேன் என அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments