விம்கோ நகர் - மாதவரம் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் புதிய தடம்!
விம்கோ நகர் - மாதவரம் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் புதிய தடம் குறித்து...
மாதவரத்தில் உள்ள அசிசி நகர் முதல் விம்கோ நகர் வரை 11 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 88 லட்சம் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் நான்கு வழித் தடங்களில் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை நகரில் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வரவேற்பும் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் செங்கல்பட்டு வரை மற்றும் அசிசி நகர் முதல் விம்கோ நகா் வரை என இரு இடங்களின் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளியை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரியுள்ளது.
கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் பிரிவால் கோரப்பட்டுள்ளது.
அதன்படி, ஏற்கெனவே உள்ள முதல்கட்ட வழித்தடத்தின் நீட்டிப்பாக கிளாம்பாக்கம் மெட்ரோவில் இருந்து செங்கல்பட்டு வரை 27 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய தகுதியான நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மாதவரத்தில் உள்ள அசிசி நகர் முதல் விம்கோ நகா் வரை 11 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 88 லட்சம் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
திட்ட அறிக்கைக்கான ஒப்பந்த ஆவணத்தை வரும் ஆக. 3-ஆம் தேதி பதிவிறக்கம் செய்து, அதை நிறைவு செய்து வரும் செப். 7-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை செயல்படுத்தப்படவுள்ள வழித்தடத்தில், ஒரு முக்கிய நிலையமான மாதவரத்தில் உள்ள அசிசி நகர் ரயில் நிலையத்துடன் விம்கோ நகர் ரயில் நிலையத்தை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
A sum of rs 88 lakh has been allocated, and tenders have been invited, to prepare a project report for laying an 11-km metro rail line from Assisi Nagar in Madhavaram to Wimco Nagar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.