சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை கூண்டோடு பணியிட மாற்றம் செய்க: உயர் நீதிமன்றம்
சென்னை மாநகராட்சியில் உள்ள லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை 4 வார காலத்துக்குள் பணியிட மாற்றம் செய்துவிட்டு, தமிழக டிஜிபியுடன் கலந்தாலோசித்து புதிய அதிகாரிகளை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஷெனாய் நகர் பகுதியில் தனது வீட்டின் முன்புறம் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அகற்றக் கோரி லட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதில், சென்னை மாநகராட்சியில் இருக்கும் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்துவிட்டு, நேர்மையுடனும், திறமையாகவும் பணியாற்றும் அதிகாரிகள் குழுவை தமிழக டிஜிபியுடன் கலந்தாலோசனை நடத்தி அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தடுப்புப் பிரிவை அமைத்து, சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில், சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த பணியும் நடப்பதில்லை என்று நீதிபதி சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கும் நீதிபதி, மாநகராட்சிப் பகுதியில் ஆக்ரமிப்பு கட்டடங்களையும் உடனே அகற்றவும், தற்போது கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடி கட்டடங்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து ஆய்வு செய்து, அந்த கட்டடங்கள் கட்ட அனுமதி அளித்ததில் விதி மீறல் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பணியில் சேர்ந்த போது இருந்த சொத்து விவரங்களையும், தற்போது இருக்கும் சொத்து விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து வருமானத்துக்கு மீறி சொத்து வாங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், அரசு அலுவலகங்களில் லஞ்சம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை அமைக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.