மோடி, ஆர்எஸ்எஸ் மீதான விமர்சனம்: ராகுல் காந்தி மீது ம.பி. முதல்வர் தாக்கு
அந்நிய மண்ணில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சித்ததன் மூலமாக, இந்தியாவின் புகழுக்கு ராகுல் காந்தி களங்கம் ஏற்படுத்திவிட்டதாக மத்திய பிரதேச முதல்வரும், பாஜக மூத்த
சாகர்: அந்நிய மண்ணில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சித்ததன் மூலமாக, இந்தியாவின் புகழுக்கு ராகுல் காந்தி களங்கம் ஏற்படுத்திவிட்டதாக மத்திய பிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் செளஹான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியானது, குற்றம்சாட்டும் அரசியலில் ஈடுபடுகிறது. அந்நிய மண்ணில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியோரை விமர்சித்ததன் மூலமாக ராகுல் காந்தி இந்தியாவுக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டார்.
இந்தியாவில் பாஜகவும், காங்கிரஸூம் சித்தாந்தங்களில் இருக்கும் வேறுபாடுகளுக்காக போட்டியிட்டுக் கொள்கின்றன. ஆனால், நாட்டின் பெருமையை அந்நிய மண்ணில் சிதைக்கும் கலாசாரம் பாஜகவுடையது அல்ல. ராகுல் காந்தி எந்த மாதிரியான கலாசாரத்தை பின்பற்றுகிறார்? காங்கிரஸூக்கு என எந்தவொரு அரசியல் நல்லொழுக்கங்களும் கிடையாது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, நான் அமெரிக்கா சென்றிருந்தேன்.
அப்போது வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், "பிரதமர் மன்மோகன் சிங் திறம்பட செயல்படாதவரா?' என்று என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு உடனடியாக ஆட்சேபம் தெரிவித்ததுடன், "இந்தியப் பிரதமர் திறம்பட செயல்படாதவர் அல்ல. அவர் ஓர் கட்சிக்கான பிரதமர் அல்ல. ஒரு தேசத்துக்கே பிரதமரான அவர், எங்களுக்கான பெருமை' என பதிலளித்தேன் என்று சிவராஜ் சிங் செளஹான் கூறினார்.
சமீபத்தில் ஜெர்மனி, லண்டன் நாடுகளுக்குச் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ், பாஜகவை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.