முகப்பு
இந்தியா

உங்கள் கட்சி 'ஆப்' மூலம் தகவல்களை சிங்கப்பூர் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வது ஏன்? ராகுலுக்கு ஸ்மிருதி இராணி கேள்வி! 

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ 'ஆப்' மூலம் உறுப்பினர் தகவல்களை சிங்கப்பூர் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கேள்வி எழுப்பியுள்ளார

Updated On : 26 மார்ச் 2018, 6:46 pm IST
பகிர்:

புதுதில்லி: காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ 'ஆப்' மூலம் உறுப்பினர் தகவல்களை சிங்கப்பூர் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பெயரிலான அலைபேசி செயலி கடந்த 2015–ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது இந்த செயலியில் உள்ள பொதுமக்களின் சுய விவர தகவல்கள் திருடப்பட்டு உள்ளது தொடர்பாக பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு வல்லுனர் எலியட் ஆல்டர்சன் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியினை தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ 'ஆப்' மூலம் உறுப்பினர் தகவல்களை சிங்கப்பூர் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

என்ன ராகுல் காந்தி அவர்களே! உங்கள் குழுவினர் நீங்கள் கூறியதற்கு எதிராக செயல்பட்டு விட்டார்கள் போல் இருக்கிறது?  பிரதமரின் 'நமோ' ஆப்புக்கு பதிலாக உங்கள் கட்சியின் 'வித்ஐஎன்சி' ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறதே?

இவ்வாறு தெரிவித்த அவர் அதற்கு ஆதராமாக சில ஸ்க்ரீன்ஷாட்டுகளையும் பகிர்ந்திருந்தார்.

அத்துடன் மற்றொரு ட்வீட்டில் அவர் கூறியதாவது:

காங்கிரஸ் ஆப்பின் தகவல்கள் சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றின் சர்வர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் அதனை பயன்படுத்த இயலுமே? இதைப்பற்றி நீங்கள் பதில் அளிக்க கவலைப்படுவீர்களா?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

காங்கிரஸ் கட்சியின் 'வித்ஐஎன்சி' ஆப் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் திங்களன்று காலை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து அதனை நீக்கி விட்டோம். அது அடிப்படையாக உறுப்பினர் சேர்க்கைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது வேறு ஒரு தளத்திற்கு உறுப்பினர் சேர்க்கை மாற்றப்பட்டது. எனவே கடந்த ஐந்து மாதங்களாக அந்த ஆப் பயன்பாட்டிலும்  இல்லை.

இவ்வாறு காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.