FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம் அடுத்த வாரம் ஆலோசனை

நாடாளுமன்ற மக்களவை மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் ஆணையமும், சட்ட ஆணையமும் அடுத்த வாரம் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ள

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:


நாடாளுமன்ற மக்களவை மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் ஆணையமும், சட்ட ஆணையமும் அடுத்த வாரம் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளன.
இதுகுறித்து சட்ட ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து வரும் 16ஆம் தேதி ஆலோசனை நடத்த வருமாறு, சட்ட ஆணையத்தின் தலைவர் பி.எஸ். சௌஹான், சட்ட ஆணையத்தின் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்துடன் சட்ட ஆணையம் ஆலோசனை நடத்த இருக்கிறது' என்றார்.
மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, 2 தேர்தல்களையும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்டம், தொழில்நுட்ப துறை நிபுணர்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. கடந்த 2016ஆம் ஆண்டில், நாடாளுமன்ற நிலைக்குழுவும் (சட்டம்) 2 தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு பரிந்துரைத்திருந்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் கருத்துகளை சட்ட ஆணையம் கோரியது. அதற்கு, 2 தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதை ஆதரிப்பதாகவும், இதற்கு ரூ.9 ஆயிரம் கோடி செலவாகும் என தேர்தல் ஆணையம் கருத்து கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் அளித்த பரிந்துரையில், மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தலாம் எனத் தெரிவித்திருந்தது. இதுபோல் தேர்தல் நடத்துவதற்கு அரசியலமைப்பு சட்ட விதிகளில் குறைந்தது 2 திருத்தங்களாவது செய்யப்பட வேண்டும், மேலும் நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களின் ஒப்புதலும் வேண்டும் என்று சட்ட ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments