ரமலான் முதல் அமர்நாத் யாத்திரை வரை தாக்குதல் வேண்டாம்: மெஹபூபா வலியுறுத்தல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் இருந்து, வரும் ஆகஸ்ட் மாதம் அமர்நாத் யாத்திரை நிறைவடையும் வரை பயங்கவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் நிறுத்தி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் இருந்து, வரும் ஆகஸ்ட் மாதம் அமர்நாத் யாத்திரை நிறைவடையும் வரை பயங்கவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் மெஹபூபா முஃப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில தினங்களில் நேரிட்ட மோதல்களில் பயங்கரவாதிகள் 5 பேர், பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். ஓரிடத்தில் போராட்டக்காரர்கள் கல்லெறிந்ததில், சென்னைச் சேர்ந்த இளைஞர் கடந்த 7-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலத்தின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியதாவது:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது, ரமலான் நோன்பு காலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல், இந்த மாத பிற்பகுதியில் தொடங்கும் ரமலான் நோன்புக் காலம் முதல், வரும் ஆகஸ்டில் நிறைவடையும் அமர்நாத் யாத்திரைக் காலம் வரை பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும். இதுதொடர்பாக, மத்திய அரசை வலியுறுத்துவதற்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மாநிலத்தில் தொடரும் என்கவுன்ட்டர் மோதல்கள், தேடுதல் வேட்டைகள், திடீர் சோதனைகள் ஆகியவற்றால் சாமானிய மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்கள். எனவே, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதால், சிரமங்கள் குறைந்து மக்கள் சற்று நிம்மதியாக இருப்பார்கள்.
எனவே, ரமலான் நோன்பு, அமர்நாத் யாத்திரை ஆகியவை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. மேலும், ரமலான் நோன்பு நல்ல முறையில் கொண்டாடவும், அமர்நாத் யாத்திரை சிறப்பாக அமையவும் உகந்த சூழலை நாம் உருவாக்க வேண்டும். பயங்கரவாதிகளும் வன்முறையில் இருந்து இந்த மாநிலம் விடுபடுவதற்கு உதவ வேண்டும் என்றார் மெஹபூபா முஃப்தி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.