முகப்பு
இந்தியா

மக்களவையில் திருநங்கை உரிமைகள் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் திருநங்கை உரிமைகள் மசோதா அமளிக்கு மத்தியில் மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

Updated On : 17 டிசம்பர் 2018, 6:01 pm IST
பகிர்:


மக்களவையில் திருநங்கை உரிமைகள் மசோதா அமளிக்கு மத்தியில் மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) நிறைவேற்றப்பட்டது. 

திருநங்கை உரிமைகளை பாதுகாக்கும் மசோதா மக்களவையில் கடந்த ஆகஸ்ட் 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, மக்களவை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று சமூக நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பார்வைக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாவில் 27 பரிந்துரைகளை நாடாளுமன்ற நிலைக் குழு குறிப்பிட்டது. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மக்களவையில் கொண்டுவந்தார். ஆனால், இந்த மசோதாவில் இருக்கும் பிரச்னைகளை குறிப்பிட்டு அதிமுக, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

Advertisement

Advertisement

இதற்கிடையே இந்த மசோதாவின் குறிப்பிட்ட பிரிவுகளில் சீர்த்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, பிஜு ஜனதா தளத்தின் பார்த்ருஹரி மஹ்தப் மற்றும்  திரணமூல் காங்கிரஸ் கட்சியின் காகோலி கோஷ் ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், அவை நிராகரிக்கப்பட்டது. 

இதையடுத்து, அமளிக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆண்கள் மற்றும் பெண்கள் அல்லாது திருநங்கை பிரிவில் 4,87,803 பேர் இடம்பிடித்தனர். இது மொத்த மக்கள் தொகையில் 0.04 சதவீதம் ஆகும். 2013-இல், திருநங்கை சார்ந்த பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழு கல்வி, உடல் ஆரோக்கியம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் பாகுபாடு பார்ப்பது போன்ற இன்னல்களை திருநங்கைகள் எதிர்கொள்வதாக தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.