ஸ்ரீதேவியின் மரணம் ஒரு கொலை என்று கருதுகிறேன்: சுப்ரமணியன் சுவாமி கிளப்பும் பூதம்!
துபையில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் ஒரு கொலை என்று கருதுவதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
புதுதில்லி: துபையில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் ஒரு கொலை என்று கருதுவதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை ஸ்ரீதேவி துபையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக தகவல் கிடைத்தது. இது திரையுலகினரையும், ஏராளமான அவரின் ரசிர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
துபை ஹோட்டலில் உள்ள அறையில் குளிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் (பாத் டப்) சுயநினைவில்லாமல் தவறி விழுந்து மூழ்கி ஸ்ரீதேவி மரணமடைந்ததாக துபை அரசு திங்களன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
Advertisement
இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் ஒரு கொலை என்று கருதுவதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஸ்ரீதேவியின் மரணத்தில் நாம் பாலிவுட் நடிகைகளுக்கும் பிரபல கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிமுக்கும் உள்ள தொடர்புகளைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் சீரான தனமையுடன் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவர் எப்பொழுதுமே தீவிர மதுவகைகளை அருந்துபவராக இல்லை. அப்படி இருக்க எப்படி மது அவரது உடம்புக்குள் வந்தது? வலுக்கட்டாயமாக அவருக்கு மது புகட்டப்பட்டதா? அந்த ஹோட்டலில் சிசிடிவி வசதிகள் இல்லையா? அதுபற்றி ஒரு தகவலுமே வெளிவரவிலையே? ஏதோ முன்கூட்டியே திட்டமிடப்பட்டது போல் அவர் இறந்த உடனேயே இருதய செயலிழப்பால் இறந்து போனதாக திடீரென்று செய்திகள் பரவியது. சுருக்கமாகச் சொல்வதென்றால் என்னைக் கேட்டால் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் ஒரு கொலை என்று கருதுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். அதே போல செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீதேவி தனது உடல்நலம் மீது அதீத அக்கறை காட்டியவர் என்றும், அவர் ஒருபொழுதும் தீவிர மதுவகைகளை அருந்தியதில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்பொழுது யாரவது உங்களைத் தள்ளி விடாமலோ அல்லது நீங்கள் மூச்ச்சு விடுவதை வலுக்கட்டயமாகத் தடுக்காமலோ, பாத் டப்பில் மூழ்கி இறக்க இயலாது என்றும் தெரிவித்தார்.