மலப்புரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் நேரிட்ட விமான விபத்தில், மீட்புப் பணியில் ஈடுபட்ட நிர்வாக அதிகாரிகள், காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், மலப்புரம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை தலைவர் உள்ளிட்டோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானதில், மீட்புப் பணிகளை தலைமையேற்று நடத்தியவர் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கே. கோபாலகிருஷ்ணன். அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தனக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும், நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இவருடன் இணைந்து பணியாற்றிய துணை ஆட்சியர், உதவி ஆட்சியர், பாதுகாவலர்கள் என 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே கடந்த ஒரு வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
கேரளத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு இடையே இந்த விமான விபத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மாநில சுகாதாரத் துறையினருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, விமான விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் இருவருக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டது.
மேலும், மலப்புரம் மாவட்ட காவல்துறை மூத்த அதிகாரி அப்துல் கரீமுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.