தில்லி வன்முறை: செல்போன் செயலி மூலம் வாகனங்களைக் குறிவைத்துத் தாக்கிய சமூக விரோதிகள்
தில்லியில் நடந்த வன்முறை வெறியாட்டத்தின் போது, குறிப்பிட்ட மதத்தினரின் வாகனங்களைக் கண்டறிய, செல்போன் செயலியை சமூக விரோதிகள் பயன்படுத்தியிருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
தில்லியில் நடந்த வன்முறை வெறியாட்டத்தின் போது, குறிப்பிட்ட மதத்தினரின் வாகனங்களைக் கண்டறிய, செல்போன் செயலியை சமூக விரோதிகள் பயன்படுத்தியிருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
பொதுத் தகவல்கள் சமூக விரோதிகளின் கையில் சிக்கினால் என்னவாகும் என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சியாக உள்ளது.
அதாவது, தில்லியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில், குறிப்பிட்ட மதத்தினரின் வாகனங்கள் மட்டும் தீக்கிரையாக்கப்பட்டன. இதற்கு, செல்போன் செயலி மூலம், ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொடுத்தால், அதில் வாகனத்தின் உரிமையாளரின் விவரங்களைத் தெரிவிக்கும் செல்போன் செயலி மூலம் சமூக விரோதிகள், ஒரு வாகனம் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுடையது என்பதை கண்டறிந்து, அதனை தீக்கிரையாக்கியும், அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தியுள்ளனர் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
Advertisement
இதுபோன்ற ஒரு சில செல்போன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரிலும் இலவசமாகக் கிடைக்கிறது. அந்த செயலிகளில், ஒருவர், ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை போட்டால் போதும், அந்த வாகன உரிமையாளரின் அனைத்து விவரங்களும் உடனுக்குடன் தெரிய வரும்.
இன்னும் சில செல்போன் செயலிகளில், வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்தால் கூட போதும், அதன் முழு விவரங்களையும் அள்ளிக் கொடுத்துவிடும்.
ஒரு பகுதியில் குறிப்பிட்ட மதத்தினர்தான் வசிக்கிறார்கள் என்று தெரிந்து, அங்கு வந்த சமூக விரோதிகள் சாலைகளில் நின்றிருந்த வாகனங்களின் பதிவு எண்களை செல்போன் செயலியில் பதிவிட்டு, அதன் உரிமையாளர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று அறிந்து கொண்ட பிறகே வாகனங்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள் என்பது இங்கு மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவலாக உள்ளது.
அதே சமயம், வாஹன் டேட்டா (வாகனங்களின் தகவல்) என்ற பெயரில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும் தகவல்கள், தனியாருக்கும் பரிமாறப்படுகிறது. லாப நோக்கத்துடன் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தனியாருடன் பகிர்ந்து கொள்ளும் இதுபோன்ற தகவல்கள், தவறான முறையில் மற்றும் வணிக ரீதியில் பயன்படுத்தப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.