முகப்பு
இந்தியா

கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு!

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

புது தில்லி: கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக கரோனா நோய்த்தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டது. அந்நாட்டின் வூஹான் நகர சந்தையிலிருந்து அத்தொற்று பரவியதாக நம்பப்படுகிறது. இன்னும் அத்தொற்றுக்கான தோற்றுவாய் குறித்த உறுதியான தகவல்களை உலக சுகாதார அமைப்பு வெளியிடவில்லை.

அதேபோல், விலங்குகளிலிருந்து மனிதா்களுக்குப் பரவியதாக நம்பப்படுகிறது. அதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தியாவைப் பொருத்தவரையில், கேரளத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

பின்னா் மாா்ச் மாத மத்தியிலிருந்து கரோனா பரவல் சீராக அதிகரிக்கத் தொடங்கியது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 500-ஐ கடந்திருந்த சூழலில், நாடு முழுவதும் 21 நாள்களுக்குப் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி அறிவித்தாா்.

அன்றைய நிலவரப்படி, நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோா் எண்ணிக்கை 12-ஆக இருந்தது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ள சூழலில், அத்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,59,967-ஆக உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தற்போது 1,16,46,081-ஆக அதிகரித்துள்ளது.

இரண்டாவது உச்சம்?: பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஓராண்டாகவுள்ள சூழலிலும், கரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. கடந்த செப்டம்பரில் தொற்று பரவல் உச்சத்தை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாகத் தொற்று பரவல் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கரோனா பரவலின் இரண்டாவது உச்சநிலையைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

46,951 போ் பாதிப்பு: திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 46,951 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே காலகட்டத்தில், கரோனாவால் 212 போ் உயிரிழந்தனா். நாட்டில் அத்தொற்றுக்கு 3,34,646 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,11,51,468-ஆக உள்ளது.

முன்னெச்சரிக்கை அவசியம்: பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை முறையாகக் கழுவி சுத்தமாக வைத்திருப்பது, மூக்கு, கண், வாய் ஆகியவற்றை அடிக்கடி தொடாமல் இருப்பது உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் அலட்சியம் செய்யாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான நபா்கள் தயக்கம் ஏதுமின்றி தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

கரோனா ஒட்டுமொத்த பாதிப்பு

தேதி--பாதிப்பு

ஜனவரி 30, 2020--1

மாா்ச் 14, 2020--100

மாா்ச் 29, 2020--1,024

ஏப்ரல் 13, 2020--10,453

ஏப்ரல் 21, 2020--20,080

மே 18, 2020--1,00,328

ஜூன் 2, 2020--2,07,191

ஜூன் 13, 2020--3,21,626

ஜூலை 17, 2020--10,40,457

செப். 16, 2020--51,15,893

அக். 18, 2020--75, 48,238

டிச. 18, 2020--1,00,04,825

பிப். 22, 2021--1,10,15,863

மாா்ச் 22, 2021--1,16,46,081

கரோனா தினசரி பாதிப்பு 

ஜனவரி 30, 2020--1

ஏப்ரல் 29, 2020--1,738

மே 7, 2020--3,364

மே 19, 2020--6,147

ஜூன் 6, 2020--10,438

ஜூன் 27, 2020--20,131

ஜூலை 15, 2020--32,682

ஜூலை 19, 2020--40,243

ஜூலை 26, 2020--50,525

ஆக. 26, 2020--75,995

செப்.16, 2020--97,859

அக். 10, 2020--74,535

அக். 24, 2020--50,224

டிச. 11, 2020--30,034

டிச. 27, 2020--20,333

பிப். 8, 2021--8,947

பிப். 23, 2021--13,463

மாா்ச் 10, 2021--22,841

மாா்ச் 18, 2021--39,643

மாா்ச் 22, 2021--46,951

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.