பேசிக்கொண்டிருந்தபோதே நேரிட்ட கேரள செவிலியரின் மரணம்
இஸ்ரேல் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், ஹமாஸ் குழுவினர் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கம்பம்: இஸ்ரேல் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் சௌமியா, ஹமாஸ் குழுவினர் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கீரித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் சௌமியா (32). இவரது கணவர் சந்தோஷ். இவர்களுக்கு 8 வயதில் ஆண் குழந்தை உள்ளது இருவரும் கீரித்தோட்டில் வசித்து வருகின்றனர்.
சௌமியா இஸ்ரேல் நாட்டுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வேலைக்கு (கேர் டேக்கர்) சென்றார். அங்கு தெற்கு இஸ்ரேலில் உள்ள ஆஸ்கெலன் நகரில் உள்ள ஒரு வீட்டில் வயதான பெண்ணை பராமரிப்பு செய்து வந்தார்.
தற்போது கடந்த சில நாள்களாக, ரமலான் காலத்திலும் இஸ்ரேல் நாட்டில் பாலஸ்தீனர்கள் மற்றும் ஹமாஸ் குழுவினருக்கு இடையே ஆயுதப்போராட்டம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 10 -ஆம் தேதி சௌமியா தான் வீட்டு வேலை செய்யும் வீடு அருகே அவருக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்பான அறையில் செல்லிடப்பேசி வீடியோ காலில் தனது கணவர் சந்தோஷுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, இஸ்ரேலில் தொடர்ந்து இரண்டு குழுவினரிடையே ஆயுதப் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கவலையுடன் தெரிவித்தார்.
சௌமியா-கணவர் சந்தோஷ் மற்றும் 8 வய ஆண் குழந்தை
அவர் பேசிக் கொண்டிருக்கும் போது பலத்த சத்தம் கேட்டு செல்லிடப்பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதுபற்றி சந்தோஷின் சகோதரர் மற்றொரு செல்லிடப்பேசியில் சௌமியா உடன் வேலை பார்க்கும் கேரளாவை சேர்ந்தவர்களிடம் விசாரித்தார்.
அதில், சௌமியா இருந்த அறையில் ராக்கெட் ரக குண்டு தாக்கி சேதம் அடைந்தது என்று தெரிவித்தனர்.
இதுபற்றி சௌமியா உடன் வேலை செய்யும் அவரது உறவுப்பெண் ஷெர்லி பென்னி என்பவர் கேரளாவில் உள்ள தங்களது உறவினர்களுக்கு சௌமியாவும், அவரது வீட்டு எஜமானியும் சிறிய ராக்கெட் ரக ஏவுகணை குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர் என்று தெரிவித்தார்.
சௌமியா
இதுபற்றி இறந்த சௌமியாவின் கணவர் சந்தோஷ் கூறும்போது இஸ்ரேல் நாட்டில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஏராளமான பேர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராக்கெட் ரக ஏவுகணை குண்டுவெடிப்பில் சௌமியா உயிரிழந்த தகவல் அறிந்து கீரித்தோடு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
குண்டு வெடிப்பில் பலியான செளமியா உடலை கேரளம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.