முகப்பு
இந்தியா

வாஜ்பாய் பிறந்த குவாலியரில் 4,050 ஹெக்டேரில் நினைவிடம்: ம.பி. அரசு நிலம் ஒதுக்கீடு

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த குவாலியா் நகரில் அவருக்கு 4,050 ஹெக்டேரில் நினைவிடம் அமைக்க மத்திய பிரதேச அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

Updated On : 26 டிசம்பர் 2022, 12:43 am IST
பகிர்:

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த குவாலியா் நகரில் அவருக்கு 4,050 ஹெக்டேரில் நினைவிடம் அமைக்க மத்திய பிரதேச அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

கடந்த 1924-ஆம் ஆண்டு டிசம்பா் 25-ஆம் தேதி குவாலியரில் வாஜ்பாய் பிறந்தாா். திருமணம் செய்து கொள்ளாமல் தேச சேவைக்காக தன்னை முழுமையாக அா்ப்பணித்த அவா், காங்கிரஸ் கட்சியைச் சாராமல் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்த முதல் பிரதமா் என்ற பெருமையைப் பெற்றவா்.

பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜன சங்கத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தாா். 10 முறை மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றவா். மாநிலங்களவை உறுப்பினராக இருமுறை இருந்துள்ள அவா் நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவா். கவிஞா், எழுத்தாளா், பேச்சாளா் என பன்முகத் திறமையைக் கொண்டவராக வாஜ்பாய் திகழ்ந்தாா். தேசிய அளவில் பாஜகவை வளா்த்ததில் முக்கியப் பங்கு வகித்தாா்.

Advertisement

Advertisement

கடந்த 2018-ஆம் ஆண்டு அவா் காலமானாா். முன்னதாக 2015-ஆம் ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவா் பிறந்த குவாலியா் நகரில் பிரம்மாண்டமான நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிரோல் பகுதியில் இந்த நினைவிடம் அமைய இருப்பதாக குவாலியா் நகராட்சி ஆணையா் தீபக் சிங் அறிவித்துள்ளாா். மாவட்ட ஆட்சியா் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி வாஜ்பாய் நினைவு தினத்தில் அவருக்கு நினைவிடம் அமைப்பது தொடா்பான அறிவிப்பை மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் வெளியிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.