மண்ணைக் காக்க நாடு 5 திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், காற்று மாசுபாடு, புவி வெப்பமாதலைக் குறைக்கப் பெபெட்ரோல், டீசலில் பத்து சதவிகிதம் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை ஊக்குவித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி, தில்லியில் ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள ‘ மண்ணைக்காப்போம்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, கூட்டத்தினருக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, 'மண்ணைக் காப்போம்' இயக்கத்தைப் பாராட்டியதுடன், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது, நாடு புதிய உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இத்தகைய இயக்கங்கள் புதிய முக்கியத்துவம் பெறுவதாகக் கூறினார்.
கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இருப்பதாகவும், தூய்மை இந்தியா இயக்கம், கழிவுகளிலிருந்து செல்வம் திரட்டும் திட்டம், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி உபயோக குறைப்பு, எத்தனால் கலக்கும் திட்டம் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நாட்டின் பல பரிமாண முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டு.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நாட்டின் முயற்சிகள் பலதரப்பட்டவை. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாடு நீண்டகால தொலைநோக்குடன் செயல்பட்டு வருகிறது.
மேலும், பேரிடர்களைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டணி, சர்வதேச சூரிய சக்தி கூட்டணி போன்ற அமைப்புகளை நிறுவியுள்ளதாகவும், 2070-க்குள் இந்தியா பூஜ்ய உமிழ்வு என்னும் இலக்கை எட்ட தீர்மானித்துள்ளதாகவும், உலகின் சராசரி கார்பன் வெளியேற்றம் ஒருவருக்கு ஆண்டுக்கு 4 டன் என்றும், இந்தியாவில் ஒருவருக்கு ஆண்டுக்கு 0.5 டன் மட்டுமே வெளியேற்றப்படுவதாக கூறினார்.
மேலும், மண்ணைக் காப்பாற்ற ஐந்து முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளோம். மண்ணை ரசாயனமற்றதாக்குவது எப்படி?, தொழில்நுட்ப மூலம் மண்ணில் வாழும் உயிரினங்களை எவ்வாறு காப்பாற்றுவது?, மண்ணின் ஈரப்பதத்தை எவ்வாறு பராமரிப்பது?, நீர் இருப்பை அதிகரிப்பது எப்படி?, நிலத்தடி நீர் குறைவாக இருப்பதால் மண்ணுக்கு ஏற்படும் பாதிப்பை நீக்குவது எப்படி?, காடுகளின் குறைப்பினால் தொடர்ந்து ஏற்படும் மண் அரிப்பை எவ்வாறு தடுப்பது? போன்ற ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
விவசாயத் துறையில் மண் பிரச்னையைப் போக்க முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நமது விவசாயிகளுக்கு மண்ணின் வகை, மண்ணின் குறைபாடு, எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பது பற்றிய தகவல்கள் தெரியாமல் இருந்தது.
இந்த பிரச்னையை போக்குவதற்காக, நமது விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கும் பிரசாரம், மழை நீர் சேமிப்பு போன்ற பிரசாரங்கள் மூலம் நாட்டு மக்களை நீர் பாதுகாப்புடன் அரசு இணைத்து வருவதாகவும், இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே, நாட்டில் 13 பெரிய நதிகளை பாதுகாக்கும் பிரசாரமும் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், நீர் மாசுபாட்டை குறைப்பதுடன், ஆறுகளின் கரையோரங்களில் காடுகளை வளர்க்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் 7400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வனப் பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பாக திகரிக்க உத்தேசிக்கப்படுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நாட்டில் இன்று பின்பற்றப்பட்டு வரும் பல்லுயிர் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான கொள்கைகளும் வனவிலங்குகளின் எண்ணிக்கையில் சாதனை படைக்க வழிவகுத்துள்ளதாகவும், இன்று புலி, சிங்கம், சிறுத்தை, யானை என எல்லாவற்றின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது மற்றும் மண் ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு கோபர்தன் திட்டமே உதாரணம் என்றார்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கிராமங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு தீர்மானத்துள்ளதாகவும், இன்மூலம் நஞ்சில்லா உணவு கிடைப்பதுடன், கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டமும் வலுவாகும். இது இயற்கை விவசாயத்தின் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் எனத் தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டிற்குள் 26 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுக்கும் இலக்கில் இந்தியா செயல்பட்டு வருகிறது.
நாட்டில் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் 40 சதவிகித புதைபடிவமற்ற எரிபொருளில் இருந்து 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பெறுவதற்கான இலக்கை இந்தியா அடைந்துள்ளது. சூரிய ஆற்றல் திறன் 18 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் ஹைட்ரஜன் மிஷன், பொருளாதாரம் தொடர்பான கொள்கைகள், ஸ்கிராப்பேஜ் கொள்கை போன்றவை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நமது உறுதிப்பாட்டிற்கு எடுத்துக்காட்டுகள்.
இன்று, நாடு திட்டமிட்டதைவிட 5 மாதங்களுக்கு முன்னதாக, 10 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை எட்டியுள்ளதாகவும், 2014 இல் எத்தனால் கலப்பு 1.5 சதவிகிதமாக இருந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் 27 லட்சம் டன் கார்பன் கரிப்புகை வெளிப்பாடு குறைந்துள்ளதாகவும், பெட்ரோலிய இறக்குமதி குறைந்து ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பிலான அன்னியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் ரூ.40 ஆயிரத்து 600 கோடி வருமான ஈட்டியுள்ளதாக தெரிவித்த மோடி, இந்த சாதனைக்காக நாட்டு மக்கள், விவசாயிகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பிரதமரின் தேசிய விரைவு சக்தி பெருந்திட்டத்தில் தளவாட அமைப்பு மற்றும் போக்குவரத்து அமைப்பு பலப்படுத்தப்படும் என்றும், அது 100க்கும் மேற்பட்ட நீர்வழிப் பாதைகளில் போக்குவரத்தை மேம்படுத்துவது மாசுபாட்டைக் குறைக்க வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், சுற்றுச்சூழல் மற்றும் மண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட மோடி, ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகளை உருவாக்கும் மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தார் மோடி.
இதையும் படிக்க | 36 ஆண்டுகளுக்குப் பின்..: ஈரோட்டில் ஒரு '96' கதை!