எலான் மஸ்க்கால் ட்விட்டரில் ஏற்பட்டு வரும் குழப்பங்களுக்கு மத்தியில் உலகளவில் ‘கூ’ செயலி பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியதிலிருந்து ப்ளூ டிக் கட்டண உயர்வு, ஆட்கள் குறைப்பு, வருவாய் இரட்டிப்பு திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட மைக்ரோ பிளாக்கிங் தளமான கூ, சமீபத்தில் 50 மில்லியன் பதிவிறக்கங்களைப் பெற்று அசத்தி வருகிறது.
இதற்கிடையே, எலோன் மஸ்க் ப்ளூ டிக் கணக்காளர்களுக்கு 8 டாலர் (ரூ.719) வசூலிப்பதாக அறிவித்ததுபோல், கூவின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அப்ரமேயா ராதாகிருஷ்ணா, "கூவில் இது முற்றிலும் இலவசம்" எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற குளோபல் டெக் அட்வகேட்ஸ் (ஜிடிஏ) நிகழ்ச்சியில் பேசிய ராதாகிருஷ்ணா, “ஆங்கிலம் பேசும் இந்தியர்கள் கன்னடம், தமிழ் மற்றும் இந்தி மக்களுடன் அவர்களின் மொழிகளில் பேசலாம், மேலும் உலகளவில் ட்விட்டருக்கு மாற்றாக இருக்க விரும்புகிறோம்” என்றார்.
இதையும் படிக்க: ட்விட்டர் 'ப்ளூ டிக்' கணக்குகளுக்கு மாதம் ரூ.719 கட்டணம்: இந்தியாவில் அமலுக்கு வந்தது!
மூன்றாம் தரப்பு விற்பனையாளர் மூலம் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பச்சை நிற சுய டிக் பெற்ற பயனர்களுக்கு கூ செயலியில் இடுகைகளைத் திருத்தும் திறன், மஞ்சள் நிற அடையாளத்தைப் பாதுகாத்தல் மற்றும் தன்னார்வ சுய சரிபார்ப்பு செயல்முறை உள்ளிட்ட பல புதிய அம்சங்களை இயங்குதளம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூவின் இணை நிறுவனர் மயங்க் பிடவட்கா “எங்களின் 2.5 ஆண்டு குறுகிய காலத்தில் 7,500 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கூவில் உள்ளனர். சமூக ஊடகப்பரப்பில் உலகளவில் நிகழும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஆங்கிலம் பேசும் பார்வையாளர்களுக்கும் கூவைக் கிடைக்கச் செய்ய எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதாக உணர்கிறோம். நாங்கள் வளரும்போது உலகம் முழுவதும் தாய்மொழியில் பேசும் பயனர்களை கூவில் இணைப்போம். ப்ளூ டிக் போன்ற பயனர்களின் வெளிப்படைத் தன்மைக்கு பணம் பெறுவது சரியான நடவடிக்கை கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்
மேலும், ட்விட்டர் பயனர்கள் அம்சங்களுக்காக கட்டணம் வசூலிக்கப்படும் சூழ்நிலையில், நாங்கள் அதை இலவசமாக வழங்குகிறோம், ஏனெனில் இணையத்தில் தங்கள் அடையாளத்தை நிரூபிப்பது போன்ற அடிப்படை உரிமைகளுக்காக பயனர்கள் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகில் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரில் ஆங்கிலம் முதன்மை மொழியாக செயல்பட்டு வருகிறது. இந்திய மொழிகளைக் கொண்டு இயங்கும் ’கூ’ செயலி விரைவில் உலகளவில் தாய்மொழி பயனர்களுக்கு சேவையை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.