முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அவரின் மகன் அகிலேஷ் யாதவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்தார்.
அகிலேஷ் யாதவுடன் அவர் பேசியதாக உத்தரப் பிரதேச அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக நீதியின் தூணாக இருந்தவர். மிக நீண்ட போராட்டத்தின் முடிவாக அவரின் மரணம் அமைந்துள்ளது. அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் திங்கள் கிழமை இன்று (அக்.10) காலமானார். அவருக்கு வயது 82.
அவரின் மறைவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் முழு அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.