முகப்பு
இந்தியா

'இன்னும் இருவரைக் காணவில்லை' - தொங்கு பாலம் விபத்தில் மீட்புப்பணி தீவிரம்!

குஜராத் தொங்கு பாலம் விபத்தில் காணாமல் போன இருவரைத் தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

Updated On : 1 நவம்பர் 2022, 4:12 pm IST
பகிர்:

குஜராத் தொங்கு பாலம் விபத்தில் காணாமல் போன இருவரைத் தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோா் நதிக்குள் விழுந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 135-ஆக ஆனது.

மேலும் தற்போது 17 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் காணாமல்போன 2 பேரைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

12 படகுகளுடன் 125 பேர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரி தெரிவித்தார். 

மோா்பி நதியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடந்த பகுதியை பிரதமா் நரேந்திர மோடி இன்று பார்வையிடுகிறார்.  மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார். 

குஜராத் தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ. 4 லட்சமும் பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் என ரூ. 6 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் குஜராத் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.