3 குழந்தைகளின் தாய் மின் ஆட்டோ ஓட்டுநரானது எப்படி? ஏன்?
தீவிரவாத அச்சுறுத்தல்கள் நிறைந்த ஜம்மு-காஷ்மீரில் 3 குழந்தைகளின் தாய் ஒருவர் முதல் மின் ஆட்டோ ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் பாலின பகுபாட்டை முறியடித்துள்ளார்.
ஸ்ரீநகர்: தீவிரவாத அச்சுறுத்தல்கள் நிறைந்த ஜம்மு-காஷ்மீரில் 3 குழந்தைகளின் தாய் ஒருவர் முதல் மின் ஆட்டோ ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் பாலின பகுபாட்டை முறியடித்துள்ளார். 3 குழந்தைகளின் தாயான சீமா தேவி கடந்த நான்கு மாதங்களாக நக்ரோடா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் ஆட்டோ ஓட்டி கணவருக்கு ஆதரவாக இருந்து வருவதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
40 வயதான சீமா தேவிக்கு 15 வயதில் ஒரு மகனும், 14 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். மூவரும் கல்வி பயின்று வருகின்றனர். பிள்ளைகளின் கல்விச் செலவு, குடும்பம் நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லாமல் சிரமத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், தனது குழந்தைகளின் படிப்பிற்காகவும், கணவருக்கு உதவியாக இருப்பதற்காக சீமா தேவி பல்வேறு இடங்களில் வேலை தேடியுள்ளார். வேலை கிடைக்கவில்லை. இதனால் சீமா சோர்ந்துவிடவில்லை. விடாமுயற்சியாக வேலை தேடி வந்துள்ளார்.
இந்நிலையில், நாம் ஏன் வேலை தேட வேண்டும், நாமே வேலையை உருவாக்கிக்கொள்வோம் என முடிவுவெடுத்த சீமா, கணவருடன் ஆலோசித்து ஒரு மின் ஆட்டோ வாங்கி ஓட்டுவது என முடிவு செய்துள்ளனர். பின்னர், ஒரு மின் ஆட்டோவை வாங்கி கடந்த நான்கு மாதங்களாக ஆட்டோ ஓட்டி, கணவருக்கு ஆதரவாகவும், உதவியாகவும் குடும்பத்தை நடத்தி வருகிறார் சீமா தேவி.
இது குறித்து செய்தியாளர்களிடம் சீமா தேவி கூறியதாவது:
குடும்பச் செலவு, குழந்தைகளின் கல்விச் செலவு என குடும்பத்திற்கு பணத்தேவை அதிகமாக இருந்ததால், “எனது கணவரின் வருமானம் போதாத நிலையில் கணவருக்கு உதவியாக இருக்க விரும்பினேன். ஆனால், குடும்பத்தை நடத்துவதற்கு வேறு வேலை எதுவும் கிடைக்காமல் சோர்ந்திருந்த நிலையில், “பெண்களால் ரயில்கள், விமானங்களெல்லாம் ஓட்ட முடியும் போது, ஏன் நம்ம ஒரு மின் ஆட்டோவை வாங்கி ஓட்டக் கூடாது? என்ற கேள்வி என்னை தட்டி எழுப்பியது, ஊக்கப்படுத்தியது ”
இதையடுத்து நாம் ஒரு மின் ஆட்டோ வாங்கி ஓட்டலாம் என நானும் என் கணவரும் முடிவு செய்தோம். பின்னர், “நானும் என் கணவரும் ரூ.30,000 கடன் வாங்கி, மாதம் ரூ.3,000 மாதத் தவணையில் மின் ஆட்டோ ஒன்றை வாங்கினோம். என் கணவர் எனக்கு மின் ஆட்டோவை ஓட்டுவதற்கு கற்றுக்கொடுத்தார், நான் அதை விரைவாக கற்றுக்கொண்டேன்.” பின்னர், கடந்த நான்கு மாதங்களாக நக்ரோடா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் ஆட்டோவை ஓட்டி கண்ணியமான வாழ்க்கையையும், எங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியையும் வழங்கி வருகிறோம்”என்று அவர் கூறினார்.
பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்களால் ஈர்க்கப்பட்ட நீங்கள் ஆட்டோ ஓட்டுவதற்கு குடும்பத்தினர் ஆதரவாக இருக்கிறார்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “என் கணவர் மிகவும் ஆதரவாகவும் உதவியாகவும் இருக்கிறார்” என சீமா பதிலளித்தார் .
‘மின் ஆட்டோவில் பயணிப்பது பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்?’
பெண்கள் எனது ஆட்டோவில் பயணிப்பதில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள் என்று சீமா கூறினார், மேலும், பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக பள்ளிக்கு கொண்டு விடுவதாக பலரும் நம்புகிறார்கள் என சீமா கூறினார்.