முகப்பு
இந்தியா

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க..

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் போது வாடிக்கையாளர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

Updated On : 29 செப்டம்பர், 2022 at 1:56 PM
ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க..
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:53 PM


சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு என ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது பல நேரங்களில் உதவிகரமாக இருக்கும். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் போது வாடிக்கையாளர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சொந்த ஊரில் இருக்கும் வங்கியில் முதலில் தொடங்கிய வங்கிக் கணக்கு, பிறகு மாத ஊதியம் வருவதற்கு பணியாற்றும் நிறுவனம் சொல்லும் வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கு என பல்வேறு காரணங்களால் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைத் தொடங்கும் நிலை உருவாகிறது.

எப்படிப் பார்த்தாலும் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது உச்சிதம்தான். ஆனால் இந்த விஷயங்களை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

வங்கி சேவைக் கட்டணம்
வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்குகின்றன. அதில் சில சேவைகள் இலவசமாகவும், சில சேவைகளுக்குக் கட்டணமும் வசூலிக்கப்படும். எனவே, பிடித்தம் செய்யும் சேவைக் கட்டணத்தை கணக்கில் கொள்ளுங்கள்.

ஒரு வேளை நீங்கள் பயன்படுத்தவே பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் இருக்கும் ஒரு சிறிய தொகை கூட, இந்த சேவைக் கட்டணத்துக்காக பிடித்தம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

குறைந்தபட்ச இருப்புத் தொகை
பல வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை கட்டாயமாக்கியுள்ளன. அதிலும் சில வங்கிகள் பெரும் தொகையை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. அவ்வாறு இல்லாவிட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும்.

ஒரு வங்கிக் கணக்கில் என்றால் பரவாயில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் இவ்வாறு குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பது சற்று சவாலாக இருக்கும்.

எனவே, தேவையற்ற வங்கிக் கணக்குகள் இருப்பின் அவற்றை மூடிவிட்டு, குறைந்தபட்ச இருப்புத் தொகை குறைவாக இருக்கும் வங்கிகளில் புதிய கணக்குகளைத் தொடங்கிக் கொள்ளலாம்.

பணம் எடுக்கும் அளவு
ஒரு பண அட்டையில் ஒரு நாளைக்கு இவ்வளவு தொகைதான் எடுக்க முடியும் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். எனவே, அதைவிட அதிக பணம் தேவைப்படும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி அட்டைகள் வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும்.

வங்கிக் கணக்குகளுக்கு எல்லையுண்டா?
ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு எந்த வரைமுறையும் இல்லை. ஆனால், ஒரு வங்கிக் கணக்கை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தாவிட்டால் அதனை செயலற்ற வங்கிக் கணக்காக வங்கிகள் அறிவித்துவிடுவதும் உண்டு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.