அரசு சேவைகள் வீட்டு வாசலில்...பஞ்சாபில் அறிமுகமான திட்டம்!
வீட்டுக்கே அரசு சேவைகளைக் கொண்டு வரும் திட்டம் பஞ்சாப் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு சேவைகளை மக்களின் வீட்டுக்குக் கொண்டு வரும் திட்டத்தை பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் இன்று (டிச.10) தொடங்கிவைத்தனர்.
இந்தத் திட்டத்தின்கீழ் பிறப்பு, இறப்பு, சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள், ஓய்வுதியம், மின்சார கட்டணம், நில வரையறை உள்ளிட்ட 43 விதமான சேவைகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதனைத் தொடங்கி வைத்து பேசிய அரவிந்த் கேஜரிவால், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள், பஞ்சாப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே. இதுவொரு புரட்சிகரத் திட்டம். நீங்கள் அரசு அலுவலகங்களுக்குப் போக வேண்டியதில்லை. உங்கள் வீட்டு வாசலிலேயே வேலைகள் முடிந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தத் திட்டத்தில் சேவையைப் பெற மக்கள் அதற்கென்று கொடுக்கப்பட்ட சேவை எண்ணான 1076-க்கு அழைக்க வேண்டும். அவர்களுக்கு உகந்த நேரத்தில் எப்போது வரவேண்டும் எனப் பதிவு செய்தால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-ல் முதன்முறையாக இந்தத் திட்டத்தை தில்லியில் கேஜரிவால் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.