குஜராத் கலவரம்: மோடி தொடர்பான பிபிசியின் விடியோ யூடியூபிலிருந்து நீக்கம்!
குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்புள்ளதாக பிபிசி நிறுவனம் வெளியிட்டிருந்த ஆவணப்படம் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்புள்ளதாக பிபிசி நிறுவனம் வெளியிட்டிருந்த ஆவணப்படம் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிபிசி தொலைக்காட்சியில், செவ்வாய்க்கிழமை ''இந்தியா: மோடி மீதான கேள்வி'' (பகுதி 1) என்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யூடியூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. யூடியூபில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த விடியோவை பலரும் தங்களது சமூக வலைதலங்களில் பகிர்ந்தனர். இதனால் சமூக வலைதளங்களில் பரபரப்பு நிலவியது.
படிக்க | குஜராத் கலவரம்: மோடி தொடர்பான பிபிசியின் பரபரப்பான ஆவணப்படம்!
Advertisement
2002 குஜராத் கலவரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையும், அப்போது அம்மாநில முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், முஸ்லிம்கள் நிலை குறித்தும் ஆவணப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தை மூத்த வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலர் தங்களது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்தனர். இதனால், அவர்களை பின்தொடர்பவர்களும் பொதுமக்கள் பலரும் அந்த விடியோவைப் பார்வையிட்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
இதற்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துகள் எழுந்து வந்த நிலையில், தற்போது பிபிசியின் ஆவணப்படம் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
யூடியூபிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு இந்த விடியோவை அனைவரும் விரைந்து பார்க்க வேண்டும் என மூத்த வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண், டெரிக் ஓ பிரையன் ஆகியோர் குறிப்பிட்டு பகிர்ந்திருந்தனர்.
குஜராத் கலவரம்:
2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 790 முஸ்லிம்கள், 254 ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணவில்லை என்றும் 2,500 பேர் படுகாயமடைந்ததாகவும் 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.