சனாதனத்திற்கு எதிராகப் பேசினால் நாக்கைப் பிடுங்குவோம்: கஜேந்திர சிங் ஷெகாவத் பேச்சு
சனாதனத்தை எதிர்த்துப் பேசுபவர்களின் நாக்கைப் பிடுங்குவோம் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சனாதனத்தை எதிர்த்துப் பேசுபவர்களின் நாக்கைப் பிடுங்குவோம் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த வாரம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'கொசு, டெங்கு, மலேரியா, கரோனா போன்றவற்றை எதிர்க்கக் கூடாது, ஒழித்துக்கட்ட வேண்டும். அதுபோல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்' என்று பேசினார்.
இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ஒருசாரார் உதயநிதியின் பேச்சுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பர்மர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், 'சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என சிலர் பேசி வருகின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அதனைக் காப்பாற்றியுள்ளனர்.
சனாதன தர்மத்திற்கு எதிராகப் பேசுபவர்களை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. சனாதனத்திற்கு எதிராகப் பேசுபவர்களின் நாக்கைப் பிடுங்குவோம், அதனை அலட்சியமாகப் பார்ப்பவர்களின் கண்களைப் பிடுங்குவோம்.
சனாதனத்திற்கு எதிராகப் பேசுபவர்கள் யாரும் நாட்டில் அரசியல் அதிகாரம், அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள முடியாது' என்று பேசியுள்ளார்.