முகப்பு
இந்தியா

கடன் ரூ.6,203 கோடி; வசூலித்தது ரூ.14,131 கோடி!! நிவாரணம் கோருவேன்: விஜய் மல்லையா

விஜய் மல்லையாவின் கடன் தொகையை மத்திய அரசு வசூலித்துள்ளது பற்றி..

Updated On : 19 டிசம்பர் 2024, 8:42 am IST
விஜய் மல்லையா
பகிர்:

வங்கியில் பெறப்பட்ட கடன் வட்டியுடன் சேர்த்து ரூ. 6,203 கோடி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், என்னுடைய சொத்துகளை விற்று ரூ. 14,131 கோடி வசூலித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபா் விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் தஞ்சமடைந்தாா்.

இதனிடையே, அவர் பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இந்தியாவில் உள்ள அவரது சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

Advertisement

இந்த நிலையில், மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை துறை பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் மேற்கொண்ட நடவடிக்கைகளில் விஜய் மல்லையாவின் ரூ.14,131.16 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்பட மொத்தமாக ரூ.22,280 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து விஜய் மல்லையா வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

கிங் ஃபிஷர் ஏர்லைனின் மொத்த கடன் வட்டித் தொகை ரூ. 1,200 கோடியுடன் சேர்த்து ரூ. 6,203 கோடி என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அமலாக்கத்துறையால் எனது சொத்துகள் ரூ. 14,131 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆனால் நான் இன்னும் பொருளாதாரக் குற்றவாளியாக உள்ளேன். எனது கடன் தொகையைவிட இரு மடங்குக்கு மேல் வசூலிக்கப்பட்டதை அமலாக்கத்துறையும் வங்கியும் நியாயப்படுத்தவில்லை என்றால் நிவாரணம் கேட்க எனக்கு உரிமை உண்டு.

கடன் தொகையைத் தாண்டி என்னிடம் இருந்து ரூ. 8,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. என்னை துஷ்பிரயோகம் செய்பவர்கள் உள்பட யாராவது முன்வந்து இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவார்களா? இழிவுப்படுத்தப்பட்ட என்னை ஆதரிக்க தைரியம் தேவை.

சிபிஐ பதிவு செய்துள்ள குற்ற வழக்குகளுக்கு நான் பதிலளிக்க வேண்டும் என்றும் அரசும் என்னை விமர்சிப்பவர்களும் கூறுகிறார்கள். சிபிஐ என்ன வழக்கு பதிவு செய்தது? நான் யாரிடம் இருந்தும் ஒரு ரூபாய்கூட கடனாக பெறவில்லை, திருடவில்லை.

ஆனால், கிங்ஃபிஷர் கடனுக்கு உத்தரவாதம் அளித்தவர் என்ற முறையில் ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் உள்பட ரூ.900 கோடி கடனை மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு கடனும் வட்டியுடன் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டது. 9 ஆண்டுகள் கடந்தும் மோசடி செய்ததற்கும், நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதற்கும் உறுதியான ஆதாரம் இல்லாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.