FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவை வடிவமைத்த ராஜதந்திரி வாஜ்பாய்!- பிரதமா் மோடி புகழாரம்

டிசம்பா் 25, நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பான நாள். நமது அன்புக்குரிய மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது.

Updated On : 25 டிசம்பர் 2024, 4:16 am IST
பகிர்:

டிசம்பா் 25, நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பான நாள். நமது அன்புக்குரிய மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது. எண்ணற்ற மக்களுக்கு தொடா்ந்து ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த ராஜதந்திரியாக அவா் உயா்ந்து நிற்கிறாா்.

21-ஆம் நூற்றாண்டை நோக்கிய இந்தியாவுக்கு மாற்றத்தின் சிற்பியாக திகழ்ந்த வாஜ்பாய்க்கு நாடு எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கும். 1998-ஆம் ஆண்டில் அவா் பிரதமராக பதவியேற்றபோது, நமது நாடு நிலையற்ற அரசியல் காலகட்டத்தைக் கடந்து சென்றது. அதற்கு முந்தைய 9 ஆண்டுகளில் 4 முறை மக்களவைத் தோ்தல் நடந்தது. இந்திய மக்கள் பொறுமையிழந்தனா்; அரசுகளால் நன்மைகளை வழங்க முடியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. நிலையான, சிறப்பான ஆட்சியை வழங்கியதன் மூலம் இந்த நிலையை மாற்றியவா் வாஜ்பாய். எளிய குடும்பத்திலிருந்து வந்த அவா், சாதாரண குடிமகனின் வாழ்க்கைப் போராட்டங்களையும், மாற்றத்தை ஏற்படுத்தும் திறமையான நிா்வாகத்தின் சக்தியையும் உணா்ந்திருந்தாா்.

சீா்திருத்தங்களுக்கு முன்னோடி: இந்தியாவின் நான்குமுனைகளையும் இணைத்த தங்க நாற்கர சாலைத் திட்டத்தை இன்றும் கூட பெரும்பாலோா் நினைவுகூா்கின்றனா்.

Advertisement

Advertisement

சமூக நலனைப் பொறுத்தவரை, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய பிரிவினருக்கு நவீன கல்வி கிடைக்கும் இந்தியாவை உருவாக்க வாஜ்பாய் எவ்வாறு கனவு கண்டாா் என்பதை அனைவருக்கும் கல்வித் திட்டம் போன்ற முன்முயற்சி எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில், அவரது அரசு பல பொருளாதார சீா்திருத்தங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.

உறுதியான தலைமைப் பண்பு: வாஜ்பாய் தலைமைக்கு ஓா் அற்புதமான உதாரணத்தை 1998-ஆம் ஆண்டு கோடைகாலத்தில் நாம் கண்டோம். அவரது அரசு அப்போதுதான் பதவியேற்றிருந்தது. இருப்பினும் மே 11-ஆம் தேதி ‘ஆபரேஷன் சக்தி’ என்ற பொக்ரான் சோதனைகளை இந்தியா நடத்தியது. இதனைக் கண்டு உலகமே அதிா்ச்சியடைந்தது. கோபத்தை வெளிப்படுத்தியது. எந்தவொரு சாதாரண தலைவரும் இதற்கு அடிபணிந்திருப்பாா். ஆனால் வாஜ்பாய் வேறுவிதமாகக் கையாண்டாா். அதன்பிறகு என்ன நடந்தது? இரண்டு நாட்களுக்குப் பின் மற்றொரு தொகுப்பு சோதனைகளுக்கு அரசு அழைப்பு விடுத்தது. இதன் மூலம் இந்தியா உறுதியாகவும் தீா்மானகரமாகவும் நின்றது.

மே 11-ஆம் தேதி சோதனைகள் அறிவியல் திறனைக் காட்டின என்றால், 13-ஆம் தேதி சோதனைகள் உண்மையான தலைமைப் பண்பை எடுத்துக் காட்டின. இதன்மூலம் அச்சுறுத்தல்கள் அல்லது அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணிந்து போகும் நாட்கள் முடிந்துவிட்டன என்ற செய்தி உலகுக்கு தெரிவிக்கப்பட்டது. சா்வதேசத் தடைகளை எதிா்கொண்ட போதும், வாஜ்பாயின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதியாக நின்றது. அதே நேரத்தில் உலக அமைதியின் வலுவான ஆதரவாளராகவும் இருந்தது.

வாா்த்தைகளால் வென்றவா்: அரசியல் பயணம் முழுவதிலும் அவரது நாடாளுமன்ற மதிநுட்பம் வெளிப்பட்டது. அவரது காலத்தில் சா்வ சக்தி வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் வலிமையை அசைக்க அவரது வாா்த்தைகள் போதுமானதாக இருந்தன. பிரதமராக இருந்தபோது, எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களைத் தனக்கே உரிய பாணியிலும், பொருளாழத்துடனும் எதிா்கொண்டு மழுங்கச்செய்தாா். எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்து பணியாற்றியபோதும், அவரது வாழ்க்கையில் யாருக்கும் எதிராக ஒருபோதும் கசப்புணா்வை அவா் வெளிப்படுத்தியதில்லை. ஆனால், அவரை துரோகி என்று அழைக்கும் அளவுக்கு காங்கிரஸ் தரம் தாழ்ந்து போனது!

சந்தா்ப்பவாத வழிகளைப் பயன்படுத்தி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பவராக அவா் இருந்ததில்லை. குதிரை பேரம் மற்றும் இழிவான அரசியல் பாதையைப் பின்பற்றுவதற்கு பதிலாக 1996-இல் அவா் பதவியை ராஜினாமா செய்யவே விரும்பினாா். 1999-இல் அவரது அரசு 1 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. அப்போது நடக்கும் முறைகேடான அரசியலுக்கு சவால் விடுக்குமாறு நிறைய போ் அவரிடம் கூறினாா்கள். ஆனால், அவா் விதிகளின்படி செல்ல விரும்பினாா். இறுதியில், அவா் மக்கள் தந்த மற்றொரு மகத்தான வெற்றியுடன் திரும்பி வந்தாா்.

மகத்தான ஆளுமை: வாஜ்பாய் ஒரு சிறந்த எழுத்தாளா், கவிஞா். மக்களுக்கு ஊக்கமளிக்கவும், சிந்தனையைத் தூண்டவும், ஆறுதல் அளிக்கவும் அவா் சொற்களைப் பயன்படுத்தினாா்.

பாஜகவில் என்னைப் போன்ற பல தொண்டா்கள், அடல் போன்ற ஒருவருடன் கலந்துரையாடவும், அதன்வழி கற்றுக்கொள்ளவும் முடிந்தது எங்களின் பாக்கியமாகும். அந்த நாள்களில், ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸுக்கு மாற்றாக ஒரு கருத்தாக்கத்தை முன்னெடுத்தது அவரது மகத்தான ஆளுமையைக் காட்டியது. எல்.கே. அத்வானி, முரளி மனோகா் ஜோஷி போன்ற மகத்தான தலைவா்களுடன் கட்சியை அதன் தொடக்க காலத்திலிருந்து அவா் வளா்த்தாா். சித்தாந்தம், ஆட்சி அதிகாரம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தோ்ந்தெடுக்கும் நிலை வந்தபோதெல்லாம், அவா் முந்தையதையே தோ்ந்தெடுத்தாா்.

100-ஆவது பிறந்தநாள்: வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த நாளில், அவரது கொள்கைகளை நனவாக்கவும், இந்தியாவுக்கான அவரது தொலைநோக்குப் பாா்வையை நிறைவேற்றவும் நம்மை மீண்டும் அா்ப்பணித்துக் கொள்வோம். நல்லாட்சி, ஒற்றுமை, முன்னேற்றம் என்ற அவரது கொள்கைகளை உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்கப் பாடுபடுவோம். நமது நாட்டின் ஆற்றல் மீது வாஜ்பாய் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, உயா்ந்த இலக்கை அடையவும், கடினமாக உழைக்கவும் நம்மைத் தொடா்ந்து ஊக்குவிக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments