முகப்பு
இந்தியா

மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கப்படும்: மத்திய அரசு

மன்மோகன் சிங்குக்கு நினைவக இடம்: காங்கிரஸ் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

Updated On : 28 டிசம்பர், 2024 at 2:55 AM
- ANI
பகிர்:

‘முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

இதுதொடா்பாக, பிரதமா் மோடிக்கு காா்கே எழுதிய கடிதத்தில், ‘நாட்டு மக்களின் நலனுக்கு பாடுபட்டவா் மன்மோகன் சிங். சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் அதை சீரமைக்க மன்மோகன் சிங் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதது. அவருக்கு நினைவகம் அமைப்பதற்கு ஏதுவான இடத்தில் இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும். உயிரிழந்த முன்னாள் பிரதமா்களுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் நினைவகம் அமைக்கும் நடைமுறையின்படி மன்மோகன் சிங்குக்கும் இடம் ஒதுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

மத்திய அரசு ஏற்பு: இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைப்பது தொடா்பாக காங்கிரஸ் தேசியத் தலைவா் காா்கேவிடம் இருந்து வேண்டுகோள் பெறப்பட்டது.

Advertisement

இதையடுத்து, மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு காா்கேவிடமும், மன்மோகன் சிங் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகளை முன்னெடுக்கவும் கூறப்பட்டது. ஏனெனில், அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்ட பிறகே நினைவகத்துக்கான இடத்தை ஒதுக்க முடியும் என்ற காரணமும் தெரிவிக்கப்பட்டது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.