சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கருக்கு 5 மாத சிறை தண்டனை!
அவதூறு வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு!
அவதூறு வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்ட சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர்(69) மீது தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா தொடர்ந்த அவதூறு வழக்கில் திங்கள்கிழமை(ஜூலை 1) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
என்ஜிஓ அமைப்பான ’தேசிய குடிமையியல் விடுதலைகள் சங்கத்தின்’ அப்போதைய தலைவராக பதவி வகித்த வி.கே. சக்சேனாவை குறிப்பிட்டு, நவம்பர் 5, 2000இல், பத்திரிகை ஒன்றில் ”தேசபக்தரின் உண்மை முகம்” என்ற பெயரில் தவறான உள்ளீடுகளை இணைத்து, மேதா பட்கர் கட்டுரை ஒன்றை வெளியிட்டதாக சக்சேனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக மேதா பட்கருக்கு எதிராக அவதூறு வழக்கை தொடுத்தார் சக்சேனா.
இந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதமாக ரூ. 10 லட்சம் தொகை செலுத்தவும் தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை(ஜூலை 1) உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் விசாரணையில், சக்சேனா பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பட்கர் செயல்பட்டிருப்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து பட்கர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, ஆகஸ்ட் 1 வரை அவரது தண்டனை ஒத்தி வைக்கப்படுவதாகவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனக்கெதிரான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து பேசிய மேதா பட்கர், ”உண்மையை எப்போதும் வீழ்த்த முடியாது. நாங்கள் யாரையும் களங்கப்படுத்த முயற்சிக்கவில்லை. எங்கள் பணியை மட்டுமே செய்தோம். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளோம்” என்றார்.
சமூக செயற்பாட்டாளரான மேதா பட்கர் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பழங்குடியினர், தலித் பிரிவினர், விவசாயிகள், தொழிலாளர்கள் என சாமானிய சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை எதிர்த்து அவர்களுக்கு ஆதரவாக பல போராட்டங்களை முன்னின்று நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.