முகப்பு
இந்தியா

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. அவையில் பிரதமர் மோடி பதில்

ராகுல் கேள்விகளுக்கு மக்களவையில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் பதில்.

Updated On : 1 ஜூலை, 2024 at 10:03 AM
ராகுல் காந்தி மக்களவையில் பேச்சு - -
பகிர்:

அக்னிவீரர் திட்டம், பாஜகவின் வெறுப்பு அரசியல், அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவது என பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இன்று மக்களவையில் எழுப்பினார்.

மக்களவையில் ராகுல் எழுப்பிய கேள்விக் கணைகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை பதில் அளித்துள்ளார். இன்று மக்களவையில், பதிலளித்த பிரதமர் மோடி, அரசமைப்பு என்ன சொல்கிறேதா அதன்படி நடக்கிறேன் என்று மக்களவையில் ராகுல் பேச்சுக்கு இடையே 2வது முறையாக எழுந்து பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.

முன்னதாக, அக்னிவீரர் திட்டத்தில் பணியாற்றும் ஒரு வீரர் பலியானால், அவரது மரணத்தை வீர மரணமாக இந்த அரசு ஏற்காது. ஒரே ராணுவத்தில் பணியாற்றும் ஒரு வீரருக்கு அதிகப்படியான சலுகை கிடைக்கும், மற்றவருக்குக் கிடைக்காது என்றால் அது ராணுவத்துக்குள் பிளவை ஏற்படுத்தும். அக்னிவீரர் திட்டத்தில் சேர்ந்து பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது, பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் திட்டமே அக்னிவீரர்கள் திட்டம், இதில் பணியாற்றும் வீரர்களுக்கு முறைப்படியான பயிற்சி அளிக்கப்படாது. இவர்கள்தான் ஐந்து ஆண்டுகள் பயிற்சி பெற்ற சீன வீரர்களுடன் மோதுவார்கள் என்றும் ராகுல் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Advertisement

இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் குறுக்கிட்டு பதிலளித்துள்ளார். மேலும், ராகுல் தவறான விவரம் கூறுகிறார். அக்னிவீரர் திட்டத்தில் உயிரிழிந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி தரப்படுகிறது என்றும் விளக்கம் கொடுத்தார்.

முன்னதாக பேசிய ராகுல் காந்தி, நமது நாட்டின் மாமனிதர்கள் அகிம்சை குறித்துத்தான் பேசியிருக்கிறார்கள். ஆனால் இங்கே ஹிந்துகள் என்று கூறிக்கொள்ளும் சிலரோ, வெறுப்பு, பொய் உள்ளிட்டவை குறித்துத்தான் பேசுகிறார்கள். பாஜகவினர் உண்மையான ஹிந்துக்கள் அல்லர் என்று ராகுல் தெரிவித்தார்.

ராகுலின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹிந்துக்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமையடையும் கோடானு கோடி மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக, மக்களவையில் ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீட் விவகாரம் உள்ளிட்டவற்றால் மக்களவை, மாநிலங்களவையில் தொடர்ந்து அமளி நீடித்து வந்தது. அப்போது, ‘குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தில், எதிா்க்கட்சிகள் எந்த விவகாரத்தை எழுப்பினாலும் அரசுத் தரப்பில் பதிலளிக்கப்படும்’ என்று அவைத் தலைவா் ஓம் பிா்லாவும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments