காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்குக்கு பரோல்: ஜூலை 5-ல் பதவியேற்பு
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா முன்னிலையில் ஜூலை 5ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் அம்ரித்பால் சிங்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காலிஸ்தான் ஆதரவாளரும் 'வாரிஸ் பஞ்சாப் தே' கட்சித் தலைவருமான அம்ரித்பால் சிங், எம்.பி.யாக பதவியேற்பதற்காக பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இவர் ஜூலை 5ஆம் தேதி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் வாரிஸ் பஞ்சாப் தே கட்சி (தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாதது) சார்பில் சுயேட்சையாக போட்டியிட்டு 1.97 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அம்ரித்பால் சிங் வெற்றி பெற்றார்.
Advertisement
Advertisement
தேர்தலின்போது அவர் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் சிறையில் இருந்தார். சிறையில் இருந்தவாறே தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.
அமிர்தசரஸில் உள்ள காவல் நிலையத்தில் புகுந்து சூறையாடிய வழக்கில் அம்ரித்பால் சிங் தேடப்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் இவர் பஞ்சாப் மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்தவாறு பஞ்சாப் அரசுக்கு ஜூன் 11ஆம் தேதி அம்ரித்பால் சிங் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தேர்தலில் வெற்றி பெற்ற தாம், எம்.பி.யாக பதவியேற்பதற்காக தன்னை தற்காலிகமாக விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை, பஞ்சாப் அரசு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பியது. மக்களவைத் தலைவர் முடிவுப்படி அம்ரித்பால் சிங்குக்கு 4 நாள்கள் பரோல் வழங்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 நாள்கள் பரோலில் அவர் விடுவிக்கப்படவுள்ளார்.
மேலும், அவர் விடுவிக்கப்படும் (வெள்ளிக்கிழமை) ஜூலை 5ஆம் தேதியே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்பார் என, பஞ்சாபின் ஃபரித்கோட் தொகுதி எம்.பி. சரப்ஜித் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓம் பிர்லாவை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சரப்ஜித் சிங் என்பவர், பெனத் சிங்கின் மகனாவார். இந்திரா காந்தியை கொலை செய்தவர்களின் பட்டியலில் பெனத் சிங் பெயர் இடம்பெற்றிருந்தது. அவரின் மகன் சரப்ஜித் சிங் ஃபரித்கோட் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகவும் பதவியேற்றுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.