சாய்னாவுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசுத் தலைவர்!
சாய்னா நேவாலுடன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேட்மிண்டன் விளையாடினார்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுடன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேட்மிண்டன் விளையாடினார்.
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள விளையாட்டரங்கில் திரெளபதி முர்மு பேட்மிண்டன் ஆடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, குடியரசுத் தலைவர் மாளியிகையில் உள்ள பேட்மிண்டன் அரங்கில், புகழ்பெற்ற வீராங்கனை சாய்னா நேவாலுடன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விளையாடியது, விளையாட்டின் மீது அவர் இயற்கையாகவே பற்று கொண்டவர் என்பதை காட்டுகிறது.
Advertisement
உலக அரங்கில் பெண்கள் - வீராங்கனைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், பேட்மிண்டன் விளையாட்டின் மையமாக இந்தியா உருவெடுக்க ஊக்கம் அளிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் இச்செயல் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்ம விருது பெற்ற வீராங்கனைகள் மக்களுடன் உரையாடும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. அவள் கதை - என் கதை என்ற தலைப்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், விருது பெற்றவர்கள் கலந்துரையாடிவரும் நிலையில், நாளை சாய்னா நேவால் கலந்துரையடுகிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் கலாசார மையத்தில் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் சாய்னா நேவால் தங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் மாளையில் உள்ள பேட்மிண்டன் அரங்கில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடினார். அரங்கில் இருந்த பலரும் சாய்னாவுடன் முர்மு விளையாடியதை உற்சாகத்துடன் ஊக்கப்படுத்தினர்.