பிரபல வட மாநில யூடியூபருக்கு அவதூறு வழக்கில் சம்மன்!
பிரதமர் மோடிக்கு எதிராக யூடியூப் விடியோக்களை வெளியிட்ட பிரபல வட மாநில யூடியூபருக்கு தில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மக்களவைத் தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக தனிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையிலும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற (240) தனிப்பெரும் கட்சி என்ற நிலையை எட்டியுள்ளது.
தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தனது தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் இணைந்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பாஜகவுக்கு உருவாகியுள்ளது.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சமூக வலைதளங்களில் வட மாநில யூடியூபர் பிரபலமாகி வருகிறார். இவரால்தான் வட மாநிலங்களில் மோடி அரசுக்கு எதிராக மக்கள் திசை திரும்பியதாக சமூக வலைதளங்களிலும் சில ஆங்கில இதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Advertisement
476 மில்லியன் யூடியூப் பார்வையாளர்களைக் கொண்ட இந்தியாவில் இதன் தாக்கம் நிச்சயம் இருக்குமென ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த யூடியூபர்?
ஹரியாணாவில் பிறந்த துருவ் ராதி ஜெர்மனியில் கேஐடியில் என்ஜீனியரிங் முடித்தவர். தன்னுடைய பெயரில் யூடியூப்பினை நடத்தி வருகிறார். யூடியூப்பில் மட்டும் 21.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ளார். 4.1 பில்லியன் (41 கோடி ) பார்வைகளை கடந்துள்ளன இவரது விடியோக்கள்.
தேர்தல் நேரத்தில் மோடி அரசு குறித்து இவர் வெளியிட்ட விடியோக்கள் பல மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன்மூலமாகவும் வட மாநிலங்களில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக சமூக வலைதளங்களில் இவரை நாயகனாக சித்தரித்து மீம்ஸ்கள் வந்துகொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாஜக தலைவர் சுரேஷ் கரம்ஷி நகுவா அவதூறு வழக்கினை தாக்கல் செய்துள்ளார். அதற்காக தில்லி நீதிமன்றம் துருவ் ராதிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மும்பையின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் கரம்ஷி நகுவா, யூடியூபர் துருவ் ராதி தன்னை அவதூறு செய்ததற்காக ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனக் கேட்டுள்ளார். இந்த விசாரணை ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
துருவ் ராதியின் அவதூறினால் தனக்கு தனிப்பட முறையிலும் தொழில் ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் பாஜக தலைவர் சுரேஷ் கரம்ஷி நகுவா கூறியுள்ளார்.