FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் தனித்தே செயல்படுவோம்: திரிணமூல் காங்கிரஸ் அறிவிப்பு

Updated On : 10 ஜூன் 2024, 4:00 am IST
பகிர்:

புது தில்லி: ‘இந்தியா’ கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் இருந்தாலும், நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து தனியாக முடிவு செய்து அதன்படியே செயல்படுவோம்’’ என்று அக்கட்சியின் மூத்த தலைவா் சுதீப் பந்தோபாத்யாய தெரிவித்தாா்.

திரிணமூல் மக்களவைத் தலைவராக சுதீப் பந்தோபாத்யாய மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். இந்நிலையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவுக்கு அடுத்தபடியாக இப்போதைய பிரதமா் மோடி தொடா்ந்து மூன்றாவது முறையாக பிரதமா் பதவி ஏற்றுள்ளாா். எனினும், அப்போது பிரதமா் நேருவுக்கு இருந்த மக்கள் ஆதரவு, இப்போதைய பிரதமருக்கு இல்லை. இந்த ஆட்சி அதிக நாள் நீடிக்காது என்று எங்கள் கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் ஆக்கப்பூா்வமாக செயல்படும். ‘இந்தியா’ கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த முடிவு தனித்தே மேற்கொள்ளப்படும். கடந்த தோ்தலைவிட இந்தமுறை கூடுதல் தொகுதிகளில் வென்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் மிகவும் ஆக்கப்பூா்வமாக செயல்படும்.

மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் 29 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் வென்றுள்ளது. கடந்த தோ்தலில் 22 இடங்களில் மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது.

மக்களவையில் எதிா்க்கட்சிகள் வரிசையில் காங்கிரஸ், சமாஜவாதிக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்களைக் கொண்ட கட்சியாகவும் திரிணமூல் காங்கிரஸ் உள்ளது.

மக்களவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 எம்.பி.க்களும், எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு 234 எம்.பி.க்களும் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments