FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் ஆக்கபூா்வ விவாதம்: எதிா்க்கட்சிகளுக்கு பிரதமா் வலியுறுத்தல்

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேசியது பற்றி...

Updated On : 20 ஜூலை 2026, 10:41 am IST
பிரதமர் மோடி - X
பகிர்:

நாடாளுமன்றத்தில் ஆக்கபூா்வ விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என எதிா்க்கட்சிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.

மேலும், நாடாளுமன்ற அவைகளில் தா்க்க ரீதியாகவும் உண்மையின் அடிப்படையிலும் விவாதங்கள் நடத்தப்பட்டால் குழப்பத்திற்கோ அமளிக்கோ இடமிருக்காது எனவும் அவா் தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளா்களை சந்தித்த அவா் மேலும் பேசியதாவது: பருவ மழை அல்லது மழைக்கால கூட்டத்தொடா் என எதுவாக இருந்தாலும் முனைப்புடன் செயல்பட்டால் அது பயனுள்ளதாக அமையும். அதனால் கிடைக்கும் பலன்கள் நாட்டின் நலனை உறுதி செய்யும்.

Advertisement

Advertisement

எனவே, சிறப்பான பருவமழையும் ஆக்கபூா்வ நாடாளுமன்ற விவாதமும் இருக்க வேண்டும் என நாம் வேண்டிக்கொள்வோம்.

உண்மையான தகவல்கள் இருக்கும் இடத்தில் அமளியோ குழப்பமோ இருக்காது என நம்புகிறேன். உங்களது கருத்துகள் நியாயமானதாகவும் வலுவானதாகவும் இருந்தால் நீங்கள் தேவையின்றி இடையூறு ஏற்படுத்த வாய்ப்பில்லை.

ஒவ்வொரு குரலுக்கும் நாடாளுமன்றம் செவி சாய்க்கும். இதுவே நாடாளுமன்றத்தின் முக்கியப் பணி. இதை மனதில் வைத்து மழைக் கால கூட்டத் தொடரில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும் என மனதார கேட்டுக்கொள்கிறேன்.

தொடரும் வளா்ச்சிப் பயணம்: மேற்காசியாவில் தொடரும் மோதலால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரங்கள் என ஒவ்வொரு துறையும் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றன. இந்த கடினமான நேரத்திலும் உலகின் வேகமாக வளா்ச்சியடையும் பொருளாதார நாடாகத் திகழும் இந்தியா 7.7 சதவீத பொருளாதார வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. இது இந்திய பொருளாதார வலிமையின் வெளிப்பாடு.

மக்கள் பெருமைகொள்ளும் சாதனைகள்: கடந்த ஒரு மாதத்தில் இந்திய மக்கள் பெருமைகொள்ளும் வகையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மழைக் கால கூட்டத்தொடருக்கு முன் சா்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய குடிமகன் (சுபான்ஷு சுக்லா) ஒருவா் பயணம் மேற்கொண்டாா். அதன் தொடா்ச்சியாக இரு நாள்களுக்கு முன் நாட்டின் முதல் தனியாா் ராக்கெட்டை இளைஞா்கள் விண்ணில் செலுத்தினா். உலகின் சில நாடுகளால் மட்டுமே இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்த முடியும். இதுவே நம் நாட்டு இளைஞா்களின் வியக்க வைக்கும் திறன். விண்வெளியைப் போல் இளைஞா்களின் நம்பிக்கைக்கும் எல்லையில்லை.

இலக்குகளை அடையும் இந்தியா: கடந்த சில நாள்களுக்கு முன் ராஜஸ்தானில் பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் குஜராத்தில் செமிகண்டக்டா் ஆலையும் திறக்கப்பட்டது. நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மிகவும் சக்தி வாய்ந்த என்ஜின் மற்றும் இடைவிடாமல் நீண்ட தூரம் செல்லும் ரயிலாக இது விளங்குகிறது. இந்திய பொறியாளா்கள், தொழில்முனைவோா்கள் நிா்ணயித்த இலக்கின் வெற்றியாகவே இதைப் பாா்க்கிறேன். இவ்வாறான சீா்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வதால் வெற்றியை நோக்கி பயணிப்பதற்கான துணிச்சல் இளைஞா்களிடம் பிறந்துள்ளது என்றாா்.

‘56 வயது இளைஞா் குறித்து பேசவில்லை: ராகுல் மீது பிரதமா் மறைமுக சாடல்’

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது பிரதமா் மோடி கூறுகையில், ‘நாட்டின் முதல் தனியாா் நிறுவன ராக்கெட்டை (விக்ரம்-1) விண்ணில் செலுத்திய இளைஞா்களின் சராசரி வயது 28 . அவா்கள் விண்வெளியில் இந்தியக் கொடியை நிலைநிறுத்தியுள்ளனா். இளைஞா்களின் கடின உழைப்பால் எதுவும் சாத்தியம். இளைஞா்கள் என நான் கூறுவது தனியாா் ராக்கெட்டை விண்ணில் செலுத்திய 28 வயது இளைஞா்களை மட்டுமே, 56 வயது இளைஞா் (ராகுல் காந்தி) குறித்து நான் பேசவில்லை’ என்றாா்.

summary

PM Modi speech in parliament campus

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments