ரூ. 5,705 கோடி சொத்துடைய மத்திய அமைச்சர்!
கோடீஸ்வர மத்திய அமைச்சர்களில் பெம்மசனி சந்திரசேகர் முதலிடம்...
மத்திய அமைச்சரவையில் அதிக சொத்து மதிப்புடைய அமைச்சர் என்ற பெருமையை தெலுங்கு தேசம் கட்சியின் பெம்மசனி சந்திரசேகர் பெற்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 18-ஆவது மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் பெம்மசனி சந்திரசேகர் (வயது 48) இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 8,390 வேட்பாளர்களில் இவரின் சொத்து மதிப்பே அதிகம். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர தரவுகளின்படி, சந்திரசேகரின் சொத்து மதிப்பு ரூ.5,705 கோடியாகும்.
ஆந்திரத்தின் குண்டூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சந்திரசேகா், வெளிநாடுவாழ் இந்தியா்கள் (என்ஆா்ஐ) பிரிவைச் சோ்ந்த மருத்துவரும் தொழிலதிபருமாவார்.
குண்டூர் மாவட்டம் புரிபாலம் கிராமத்தில் பிறந்த சந்திரசேகர், ஹைதராபாத்தில் மருத்துவ இளநிலை படிப்பும், வெளிநாட்டில் மருத்துவ முதுநிலை படிப்பும் படித்துள்ளார். தொடக்கத்தில் மருத்துவ பேராசிரியராக பணியாற்றிய சந்திரசேகர், தற்போது சொந்தமாக நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இவருக்கு அடுத்து அமைச்சரவையில் அதிக சொத்து மதிப்புடையவர் ஜோதிராதித்ய சிந்தியா. மத்திய கேபினேட் அமைச்சராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள இவரின் சொத்து மதிப்பு ரூ. 484 கோடியாகும்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட டாப் 10 கோடீஸ்வரர்களில் சந்திரசேகர் மற்றும் சிந்தியா மட்டுமே வெற்றி பெற்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
மேலும், 18-ஆவது மக்களவைத் தோ்தலில் வென்றுள்ள எம்.பி.க்கள் குறித்து செய்யப்பட்ட ஆய்வில் வெற்றி பெற்ற 543 வேட்பாளா்களில் 504 போ் கோடீஸ்வரா்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
32 சதவீதம் எம்பிக்கள் ரூ.1 முதல் 5 கோடி வரையிலும் 19 சதவீதம் போ் ரூ. 5 முதல் 10 கோடி வரையிலும் 42 சதவீதம் போ் ரூ. 10 கோடி மற்றும் அதற்கு மேலும் சொத்து வைத்துள்ளனா். சுமாா் 1 சதவீதத்தினா் மட்டுமே ரூ.20 லட்சத்துக்கும் குறைவான சொத்துக்களைக் கொண்டுள்ளனா்.
கட்சி வாரியாக
பாஜக - 227
காங்கிரஸ் - 92
திமுக - 21
திரிணமூல் காங்கிரஸ் - 27
சமாஜவாதி - 34
தெலுங்கு தேசம் -16
ஐக்கிய ஜனதா தளம் - 12
ஆம் ஆத்மி - 3