பாரதிய ஜனதா கட்சியின் வழிகாட்டுதல் குழுவில் மோடி, ராஜ்நாத் சிங்! காரணம் என்ன?
மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி மட்டுமே இருக்கும் பா.ஜ. வழிகாட்டுதல் குழுவில் மோடி இடம் பெற்றிருப்பது பற்றி..
பாரதிய ஜனதா கட்சியின் வழிகாட்டுதல் குழுவில் (மார்க்தர்சக் மண்டலில்) பிரதமர் நரேந்திர மோடியும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடம் பெற்றுள்ளனர்.
குழுவில் இவர்கள் இருவரும் இடம் பெற்றிருக்கும் தகவல் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bjp.org/ -ல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் குழுவில் இதற்கு முன்னர், கட்சிப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.
Advertisement
குழுவில் மோடியும் ராஜ்நாத் சிங்கும் எப்போது சேர்க்கப்பட்டனர் என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. எனினும், இவர்கள் இருவரும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பது பற்றி தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
மார்க்தர்சக் மண்டல் பக்கத்தில் https://www.bjp.org/margadarshak-mandal பக்கத்தில் படங்களுடன் பிரதமர் மோடி, எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங் இடம் பெற்றுள்ளனர்.
‘இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவு பெறும். இதைத் தொடர்ந்து, தீவிர அரசியலிலிருந்து மோடி விலகுமாறு அறிவுறுத்தப்படுவார். உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமராவார்’ என்று தேர்தல் பிரசாரத்தின்போது ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கேஜரிவால் குறிப்பிட்டிருந்தார்.