கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பாஜக போராட்டம் அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கர்நாடகத்தில் எதிர்க்கட்சியான பா.ஜ.க திங்கள்கிழமை மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளது.
கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுகிறது. கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசு மாநில வருவாயை அதிகரிப்பதற்காக, பெட்ரோல், டீசலுக்கான விற்பனை வரியை முறையே 29.84 சதவீதமும், 18.44 சதவீதமும் சனிக்கிழமை(ஜூன் 15) உயர்த்தியதைத் தொடர்ந்து, இந்த விலை உயர்வு அமலாகிறது. தலைநகர் பெங்களூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.84க்கு விற்பனையான நிலையில், விலை உயர்வால் ரூ. 102.84க்கு விற்பனை செய்யப்படுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல, ஒரு லிட்டர் டீசல் ரூ.85.93க்கு ஆக விற்பனையான நிலையில், விலை உயர்வால் ரூ. 88.95க்கு விற்பனை செய்யப்படுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வால், அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்கள் கலக்கமடைந்துள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கர்நாடகத்தில் எதிர்க்கட்சியான பா.ஜ.க திங்கள்கிழமை போராட்டம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் அரசின் முடிவுக்கு பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், "கர்நாடக காங்கிரஸ் அரசு உத்தரவாதத் திட்டங்களைப் பற்றி அதிகம் பேசி வருகிறது. ஆனால், மாநிலத்தை நடத்துவதற்கு போதிய பணம் இல்லாத நிலைதான் மாநிலத்தில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மாநில அரசின் முடிவை திரும்பப் பெறக்கோரி திங்கள்கிழமை கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் எஸ்.பிரகாஷ் கூறியதாவது, "சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மாநிலத்தில் பெட்ரோல் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.