பிற தென் மாநிலங்களை விட கர்நாடகத்தில் பெட்ரோல் மீதான வரி குறைவு: முதல்வர் சித்தராமையா
பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது ஏன்? முதல்வர் சித்தராமையா விளக்கம்
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசு, மாநில வருவாயை அதிகரிப்பதற்காக, பெட்ரோல், டீசலுக்கான விற்பனை வரியை முறையே 29.84 சதவீதமும், 18.44 சதவீதமும் சனிக்கிழமை(ஜூன் 15) உயர்த்தியது.
இதையடுத்து கர்நாடகத்தில் பெட்ரோல் விலை நில்லடுக்கு ரூ.3, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3.50 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்வர் சித்தராமையா தெளிவுபடுத்தியுள்ளார்.
கர்நாடகத்தில் அடிப்படை பொது சேவைகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் நிதி தேவைப்படுவதால் இந்த விலையேற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது, விலையேற்றத்துக்கு பின்னரும், பெட்ரோல், டீசல் மீதான வரிகள் பிற தென் மாநிலங்கள் மற்றும் குஜராத், மகாராஷ்டிரத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.
கடந்த பாஜக ஆட்சியில் மாநிலத்துக்கு வருவாய் குறைந்ததாகவும், மத்திய பாஜக அரசு வரிகளை உயர்த்திவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள சித்தராமையா, பொறுப்பான நிர்வாகத்தை அரசு நடத்தி வருவதாகவும், மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்கவும் வலியுறுத்தியுள்ளார்.