உ.பி. அக்பர் நகரில் இடிக்கப்பட்ட 1,200 குடியிருப்புகள்!
அக்பர் நகர் பகுதியில் சுற்றுலா மையத்தை உருவாக்க உ.பி. அரசு திட்டம்.
உத்தரப் பிரதேசத்தில் ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக அக்பர் நகரைச் சேர்ந்த 1,200 குடியிருப்புகள் இடிக்கப்பட்டன.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள அருகேவுள்ள கோமதி ஆற்றின் இடதுகரையை ஒட்டியுள்ள துணை நதியான குக்ரைல் ஆற்றின் கரையோரம் அக்பர் நகர் அமைந்துள்ளது.
இங்கு ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக 1,169 குடியிருப்புகள் மற்றும் 100 வர்த்தகக் கட்டடங்களை லக்னெள மேம்பாட்டு ஆணையம் புல்டோசர் இயந்திரங்களைக் கொண்டு இடித்துள்ளது.
Advertisement
ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் 24.5 ஏக்கர் நிலப்பரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு குடியிருப்புப் பகுதிகளுடன் ஹிந்து, இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த வழிபாட்டு தலங்கள் உள்பட 1,320 கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
செவ்வாய் கிழமையான நேற்று 100 கட்டடங்கள் இடிக்கப்பட்டதாகவும் தற்போது இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் லக்னெள மேம்பாட்டு ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இப்பகுதியில் வீடுகளை இழந்த மக்களுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இதே நகரத்தின் மறுபக்கம் மாற்று வீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அக்பர் நகரைச் சேர்ந்த 1,800 குடும்பங்கள் மாற்று வீடுகளுக்கான உத்தரவை பெற்றுள்ளனர். அக்பர் நகர் பகுதியில் சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா மையத்தை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.