முகப்பு
இந்தியா

முல்லைப் பெரியாறு அணை வெள்ள அபாயம்: இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

Updated On : 20 ஜூன் 2024, 2:43 am IST
பகிர்:

முல்லைப்பெரியாறு, இடுக்கி அணைகளுக்கு வெள்ளத்தால் ஏற்படும் ஆபத்துகளை விண்வெளி தொழில்நுட்பத்தின் உள்ளீடுகள் மூலம் தடுப்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மத்திய இணையமைச்சர் சுரேஷ்கோபி ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் புதன்கிழமை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின்(இஸ்ரோ) தலைவர் எஸ்.சோமநாத்தை மத்திய பெட்ரோலியல், இயற்கை எரிவாயு, சுற்றுலாத் துறை இணையமைச்சர் சுரேஷ்கோபி சந்தித்தார். அப்போது, மோசமான வானிலையின் போது கேரளத்தில் உள்ள முல்லைப்பெரியாறு, இடுக்கி போன்ற அணைகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டால், அதைத் தடுப்பதற்கு விண்வெளி தொழில்நுட்பத்தின் உள்ளீடுகளைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

வெள்ளத்தை தடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் உயர் துல்லிய நிலப்பரப்புத் தரவுகள் உள்ளிட்ட உள்ளீடுகளை அளிக்கவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்த தரவுகளை வழங்குவதாகவும் இஸ்ரோ தலைவர் சோமநாத் உறுதிஅளித்துள்ளார்.

Advertisement

Advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, மறு வாழ்வளிப்பது குறித்து திட்டமிடுவதற்கு விண்வெளி தகவல்தொடர்பு திறனுடன் கூடிய மாதிரியை உருவாக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மையில் விண்வெளி தொழில்நுட்பத்தின் உதவியுடன் கூடிய கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணின் பரப்பு, அவற்றை உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளவும் விஞ்ஞானிகளை சுரேஷ்கோபி கேட்டுக் கொண்டதாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.