தெலங்கானத்தின் கரீம் நகரில் பேருந்து நிலையத்தில் குழந்தை பிறந்ததால், அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அனுமதியை மாநில சாலை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 16 அன்று கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் பத்ராசலம் செல்வதற்காக கரீம் நகர் பேருந்து நிலையத்துக்கு வந்திருந்தார். அப்போது கர்ப்பிணிப் பெண் குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியில் இந்த மாநில போக்குவரத்து ஊழியர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.
ஆம்புலன்ஸ் வருவதற்குள் குமாரிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதையடுத்து போக்குவரத்துக்கழக பெண் ஊழியர்கள் பேருந்து நிலையத்திலேயே குமாரிக்கு பிரசவம் பார்த்தனர்.
அப்போது குமாரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் குழந்தையும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் பாதுகாப்பாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கரீம்நகர் பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் மாநில அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள சிறப்புப் பயண அனுமதிச்சீட்டு வழங்கப்படுவதாக தெலங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
மேலும், கர்ப்பிணிப் பெண்ணுக்கு சரியான நேரத்தில் உதவிய போக்குவரத்து ஊழியர்களான சைதம்மா, லாவண்யா, ஸ்ரவந்தி, பவானி, ரேணுகா, ரஜனிகிருஷ்ணா மற்றும் அஞ்சய்யா ஆகியோரின் செயலுக்கு போக்குவரத்து துறை பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.